ஜப்னா அணிக்கெதிராக அரைச் சதமடித்த அவிஷ்க பெர்னாண்டோ

National Super League 2023

135

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் 3ஆவது வாரத்துக்காக நடைபெறும் ஜப்னா மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையிலான 5ஆவது லீக் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று (04) நிறைவுக்கு வந்தது.

இதில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கொழும்பு அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட் இழப்பிற்க்கு 210 ஓட்டங்களைக் குவித்து, அந்த அணியின் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்த அணித் தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ அரைச் சதம் கடந்து 62 ஓட்டங்களை எடுத்தார். முதல்தரப் போட்டிகளில் அவரதுது 6ஆவது அரைச் சதம் இதுவாகும்.

இதுதவிர, ஹேஷான் பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க, லஹிரு மதுசங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, ஜப்னாவை விட 11 ஓட்டங்களால் கொழும்பு அணி முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நேற்று (04) தொடர்ந்த ஜப்னா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொன் சந்திரகுப்த 68 ஓட்டங்களை அதிபட்சமாக எடுத்தார்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (05) தொடரும்.

இதேவேளை, தம்புள்ள மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக நேற்றைய தினமும் (04) எந்தவொரு பந்தும் வீசப்படாமல் நிறைவுக்கு வந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<