தோஹாவில் நேற்று (19) நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் சம்பியனான ருமேஷ் தரங்க முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் 88.68 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இந்த வெற்றியைத் தன்வசமாக்கினார்.
23 வயதான தரங்க, தான் நீண்ட நாட்களாக வியந்து நோக்கும் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியன்கள் பங்கேற்ற ஒரு கடினமான போட்டிக் களத்தை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பத்தில் சற்று பின்தங்கி, முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் நான்காவது இடத்தில் இருந்த இந்த இலங்கை நட்சத்திரம், பின்னர் மிகச்சிறப்பாக மீண்டெழுந்தார். தனது நான்காவது முயற்சியில் 88.68 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து போட்டியின் முழு கட்டுப்பாட்டையும் தனது வசப்படுத்தினார்.
- இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ருமேஷ் தகுதி
- hல்டன் ஸ்பைக் சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று ருமேஷ் தரங்க சாதனை
இதன் மூலம் ருமேஷ் தரங்க சர்வதேச டயமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடரொன்றில் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் மொரோக்கோவின் ரபாட்டில் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் இரண்டவாது இடத்தைப் பிடித்த அவர், இம்மாத முற்பகுதியில் ரோமில் நடைபெற்ற டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து புதிய போட்டி சாதனை மற்றும் இலங்கை சாதனையுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இப்போட்டியில் 86.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ்இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், 85.99 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த அமெரிக்காவின் கர்டிஸ் தொம்சன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.69 மீற்றர் தூரத்தை மாத்திரமே பதிவு செய்து, இப்போட்டியில் நான்காம் இடத்துடன் ஏமாற்றம் அடைந்தார். எவ்வாறாயினும், உபாதை காரணமாக கடந்த 8 மாதங்களாக அவர் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் அவர் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<






















