தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன

263

இலங்கை கிரிக்கெட்டில் வெற்றி தலைவர்களில் ஒருவராக வலம்வந்தவர்களில் மஹேல ஜயவர்தனவுக்கு முக்கிய இடம் உண்டு. வீரராக மாத்திரமல்லாமல், அணித் தலைவராக அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.  

தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்த மஹேல ஜயவர்தன, நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் வெளிநாட்டு லீக் தொடர்களில் பயிற்சியாளராக ஜொலிக்க ஆரம்பித்தார்

இதில் குறிப்பாக, உலகின் பணக்கார கிரிக்கெட் தொடரான இந்தியன் ப்ரீமியர் லீக்கில் நான்கு தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக கடந்த 3 வருடங்களாக மஹேல ஜயவர்தன செயற்பட்டு வருகின்றார்

இலங்கை வீரர்களின் தயார்நிலை குறித்து மிக்கி ஆத்தர்

இந்த காலப்பகுதியில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், வீரர்களை சிறந்த முறையில் கையாள்வது எவ்வாறு? அவர்களை எவ்வாறு முகாமைத்தவம் செய்வது? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மஹேல ஜயவர்தன The Cricket Monthly என்ற இணையத்தளத்துக்கு விசெட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  

நீங்கள் சிறுவயது முதல் பாடசாலை அணியின் தலைவராக இருந்துள்ளீர்கள். எனவே வீரர்களை முகாமைத்துவம் செய்வது குறித்த நீங்கள் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்ன?

நான் விளையாடிய 13 வயதுக்குட்பட்ட மற்றும் 15 வயதுக்குட்பட்ட அணிகள் இரண்டும் எனது தெரிவில் இடம்பெற்ற அணிகளாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நன்றாகப் பந்துவீசுகின்ற வீரர்கள் மற்றும் எதிரணிக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடிய வீரர்கள் யார் என்பதை நான் அறிந்து கொண்டேன். அது அவ்வளவு பெரிய நுணக்கம் கிடையாது.

சில வேளைகளில் எனக்கு விக்கெட்டுக்கு நேராக பந்துவீச வேண்டுமானால் அதற்கு பொருத்தமானவர் யார் என்பதை நான் நன்கு அறிந்து இருக்க வேண்டும். வலதுகை துடுப்பாட்ட வீரர் அல்லது இடதுகை வீரருக்கு யார் பொருத்தமான பந்துவீச்சாளர் என்பதை எனக்கு தெரியும். அதுதான் வீரர்கள் முகாமைத்துவம் எனலாம். அதைத்தான் நான் முதலில் கற்றுக் கொண்டேன்.

நீங்கள் இலங்கை அணிக்காக விளையாடிய போது அணித் தலைவர் ஒருவர் வீரரொருவரை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது பற்றி கற்றுக் கொண்டீர்களா?

நான் அர்ஜுன ரணதுங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் 3 வருடங்கள் விளையாடினேன். பிறகு சனத் ஜயசூரியாவின் கீழ் 3 வருடங்கள் விளையாடினேன். அதனைத்தொடர்ந்து ஷான் திலகரத்ன மற்றும் மார்வன் அத்தபத்துவின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடியிருந்தேன்.  

அதிலும் குறிப்பாக சனத் ஜயசூரியா தலைவராக இருக்கின்ற காலப்பகுதியில் என்னை அணியின் உப தலைவராக நியமித்து இருந்தார்கள். இதனால் நானும் ஆரம்ப காலத்தில் தலைவராக தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்கு வகித்தேன்

முன்னாள் அணித் தலைவர் ஜயசூரிய மற்றும் மஹேல

சனத் ஒரு இயற்கையான தலைவர். அவர் மைதானத்தில் இருக்கின்ற நிலைமைகளை கருத்திற் கொண்டு அந்த நேரத்துக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்கின்ற வீரர். ஷான் திலகரத்ன ஒரு தலைவராக மிகவும் சரியான தீர்மானங்களை எடுக்கும் வல்லமை கொண்டவர்.  

அதேபோல தான் மார்வன் அத்தபத்துவும் விளங்கினார். ஆனால் தலைமைத்துவத்தில் சரியான மற்றும் தவறான வழிமுறைகள் என்று கிடையாது. ஆனால் தொழில்முறை கிரிக்கெட்டில் நான் நிறைய தவறுகளை செய்துள்ளேன்

நீங்கள் ஒரு தலைவராக செயற்பட்ட போது மேலே குறிப்பிட்ட விடயங்களில் எவ்வாறான அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து இருந்தீர்கள்?

அந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அரசியல் ரீதியான நிறைய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. நிறைய சந்தர்ப்பங்களில் அது நேரடியாக என்னைத் தாக்கியது. ஆனாலும் தவறான விடயங்கள் செய்வதற்கு அதிக சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை

முழு பலத்துடன் T20I உலகக் கிண்ணத்துக்கு தயாராகுமா இலங்கை?

இதன் காரணமாக நான் தலைவராக நியமிக்கப்பட்ட போது இலங்கை அணியில் புதிய கலாசாரத்தை உருவாக்க முடிந்தது. அணியின் மீது அதிக பொறுப்பைக் கொடுத்து அதிகளவான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோள் என்னிடம் இருந்தது.

எனவே, நான் இலங்கை அணியில் கலாசாரமொன்றை கொண்டு வந்தேன். நீங்கள் இளம் வீரராக இருந்தால் நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு அதை மிக விரைவில் செய்ய வேண்டிய தேவை இருந்தது

நான் முகங்கொடுத்த பிரச்சினைகள் எதிர்காலத்திலும் இடம்பெறக்கூடாது என நினைத்தேன். ஏனெனில் எதிர்கால சந்ததியினருக்கு அதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன்

நீங்கள் மைதானத்தில் விளையாடுகின்ற போது சாதாரண வீரராக தோற்றமளிப்பீர்கள். அதேபோல நீங்கள் எதிர்வினைகளை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அது எப்பொழுதும் உங்களுடன் இருக்கும். இலங்கை கிரிக்கெட் அணியில் ஆடம்பரமான ஒரு காலசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது.  

அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜயசூரியா போல மற்றைய தலைவர்களும் இலங்கை அணியில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார்கள். எனவே அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்ந்து அணியை சிறப்பாக வழிநடத்துவதே எனது பொறுப்பாக இருந்தது

வீரர்களை முகாமைத்துவம் செய்வதில் சிரேஷ் வீரர்களைக் காட்டிலும் இளம் வீரர்களை முகாமைத்துவம் செய்வது இலகுவானதா?

பொதுவாக இரண்டும் ஒன்று தான். கிரிக்கெட்டில் கடினம் அல்லது இலகுவானது என்று ஒன்றும் கிடையாது. அது குறித்த வீரனின் கதாபாத்திரத்தை நன்கு புரிந்து கொண்டு அவர்களால் செய்ய முடியாத ஷ்டமான விடயங்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாமல் அவர்களிடம் உள்ள திறமைகளை மாத்திரம் வெளிக் கொண்டுவர இடமளிக்க வேண்டும்

அதிலும் குறிப்பாக, இளம் வீரர்களுக்கு அதிக அனுபவம் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன

இதனால் அவர்கள் மிகவும் திடகாத்திரத்துடன் கிரிக்கெட் விளையாடுவார்கள். அது மிகவும் சிறந்த ஆயுதம். அதேபோல அவர்கள் அனுபவம் இல்லாத காரணத்தால் அல்லது நிலைமையைப் புரிந்து கொண்டு விளையாடாத காரணத்தால் மிக விரைவில் விக்கெட்டினைப் பறிகொடுக்கின்றார்கள்

சிரேஷ்ட வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் மஹேல

மறுபுறத்தில் சிரேஷ் வீரர்கள் அதிக பொறுப்புடைய வீரர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்டு அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.  

எங்களுக்குத் தெரியும் அனைத்து வீரர்களும் வித்தியாசமான பின்னணியுடன் விளையாட வருகின்றார்கள். அவர்களுடைய கலாசாரம், பண்பாடு, மனோநிலை என்பன வித்தியாசம் கொண்டவை. எனவே ஒரு அணியின் தவைராக ஒரு வீரரின் அனைத்து குணாதிசயங்களையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்

அதேபோல, அணிக்காக நன்மதிப்பினைப் பெற்றுக்கொடுக்க அனைத்து வீரர்களையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நீங்கள் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்

உங்களால் முகாமைத்துவம் செய்யப்பட்ட ஒரு வீரரை உதாரணமாக எடுத்துக் கூறமுடியுமா?

ஆம். இலங்கை அணிக்குள் லசித் மாலிங்க வந்தார். நாங்கள் அவருக்கு நிறைய கால அவகாசம் கொடுத்தோம். அவரின் பங்களிப்பினை கடினமான காலங்களிலும் பெற்றுக் கொண்டோம். அவர் அப்போது நிறைய கதைக்காவிட்டாலும் மிகவும் திறமையான பந்துவீச்சாளர். இதனால் அவரிடம் உள்ள திறமையை வளர்த்துக் கொள்ள நாங்கள் வழி செய்து கொடுத்தோம்

அவரது பந்துவீச்சில் வித்தியாசமான நுணுக்கம் ஒன்று இருந்தது. அதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம். ஆனால் அவரை சரியான முறையில் கையாள்வதற்கும் நாங்கள் மறக்கவில்லை

லசித் மாலிங்க மற்றும் மஹேல

அவர் மெதுவான பந்து மற்றும் பௌண்சர் பந்துகளை எவ்வாறு வீச வேண்டும் என்பதை நாளுக்குநாள் கற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் போட்டிகளில் சிறந்த பந்துகளை வீசுவதற்கு ஆரம்பித்தார். இதனால் சிறந்த பிரதிபலனையும் பெற்றுக் கொண்டார்

அதிலும் குறிப்பாக இறுதி ஓவரில் எதிரணி துடுப்பாட்ட வீரருக்கு நெருக்கடி கொடுக்கின்ற முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்தார்

பொதுவாக இறுதி ஓவரில் வேறு பந்துவீச்சாளர்களை அடிக்கடி நாங்கள் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அவர்களுக்கு விரைவில் அந்த நுணக்கத்தை கற்றுக் கொள்வது மிகவும் கடினம் என்பது எங்களுக்குத் தெரியும்

ஆஸி. அணியை வாயடைக்க வைத்த மாலிங்க, மெதிவ்ஸ்

குறிப்பாக, நாங்கள் நுவன் குலசேகரவை கையாண்ட விதம் வேறு. அஜந்த மெண்டிஸ் அணிக்குள் வந்த போது நாங்கள் அவரை பாதுகாத்தோம். அதன்பிறகு அவரை நல்லதொரு பந்துவீச்சாளராக மாற்றினோம். ஏனெனில் அந்தக் காலப்பகுதியில் தான் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் போன்ற நட்சத்திர வீரர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் அந்த வீரர்களுக்கு கிடைத்தை நீங்கள் மறந்துவிட வேண்டாம்

அதேபோல தான் இளம் துடுப்பாட்ட வீரர்களும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். வேறு சில சந்தர்ப்பங்களில் போட்டியின் தன்மைக்கேற்ப விளையாட மாட்டார்கள்

அப்போது அவர்களுடன் உட்கார்ந்து  உங்களுக்கு இன்னும் அழுத்தத்துடன் விளையாடி இருக்கலாம் என சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் கிரிக்கெட்டில் கியர் என்று சொல்வோம்

சில நேரங்களில் வீரர்கள் தமது நான்காவது அல்லது ஐந்தாவது கியரில் தான் தொடர்ந்து விளையாடுவார்கள். ஆனால் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்கின்ற போது அந்த யுக்தி பொருந்தாது

எனவே நீங்கள் அவ்வாறான வீரர்களுடன் பொறுமையுடன் இருக்க வேண்டும். அது உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முக்கிய காரணியாக இருக்கும்

ஒவ்வொரு வீரருக்கும் அவர்களுடைய திறமைகளுக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுத்து அணியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கருத்துக்கு உங்களிடம் உள்ள தீர்வு என்ன

நான் வீரர்களுடன் நேர்மையாக இருப்பேன். எனக்குத் தேவை அது தான். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அதை வரவேற்றார்கள். நான் யாரையும் வற்புறுத்தவில்லை

இளம் வீரர்களைக் கொண்டு அணிக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதே எனது பிரதான குறிக்கோளாக இருந்தது. அவர்களுக்கு நிறைய சுதந்திரம், வாய்ப்பு மற்றும் பொறுப்புகளையும் கொடுக்க வேண்டும்

நான் அணித் தலைவராக இருந்த போது, எனக்கு கீழ் நிறைய சிரேஷ் வீரர்கள் விளையாடியிருந்தனர். அவர்களுக்கும் பொறுப்பு இருந்தது. அவர்கள் அனைவரும் தத்தமது பொறுப்புகளை சரிவர செய்து முடித்தனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலான சிரேஷ் வீரர்கள் தமது பக்கத்தில் இளம் வீரர்களை அழைத்து கற்றுக் கொடுத்தார்கள்

இதை நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் செயற்படுத்த முயற்சி செய்தீர்களா?

ஆம். நாங்கள் அனைவரையும் இந்த விடயத்துடன் தொடர்புபடுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றோம். மும்பை அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களிடம் அனுபவம் உண்டு

ஒருசில வீரர்கள் தான் இளம் வீரர்களாக உள்ளனர். ஆனால் அவர்களும் முதல்தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கின்றார்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுனராக மஹேல

எப்படியோ அனைத்து வீரர்களையும் உற்காசப்படுத்தி போட்டியில் பங்களிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். குறிப்பாக வீரர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிவது தலைவருக்கு சாதகத்தைக் கொடுக்கும்

அந்த நாளின் இறுதியில் தீர்மானம் எடுக்க வேண்டியது அவர் தான். ஆனால் அவர் மற்றவர்களிடம் இருந்து அதிகளவு ஆலோசனைகளை கேட்பதால் அவருடைய சிந்திக்கும் மனப்பாங்கு தடைப்படும்.

மற்றையது வீரர்கள் போட்டியின் இடைநடுவில் எடுக்கின்ற முடிவுகளுக்கு மதிப்பளிக்கின்ற பண்பு தவைவரிடம் இருக்க வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு இலகுவான விடயமல்ல. அதற்கு அவர் பரிசோதிக்கப்படுவார். அதற்கான சூழலையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்

நீங்கள் தலைக்கனம் கொண்ட வீரர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?

தலைக்கனம் வீரரிடம் இருப்பது சந்தோஷம் தான். அது எந்தவிதத்திலும் கிரிக்கெட்டை பாதிக்காது. ஆனால், தலைக்கனம் கொண்ட வீரர்களை இனங்கண்டு அவர்களை சரியான முறையில் கையாள வேண்டும்

அனைவரும் இந்தளவு தூரம் வந்ததற்கு அவர்களது திறமை காரணம் அல்லவா? எனவே அதை நீங்கள் நிரூபிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்

Catch me if you can: முத்தையா முரளிதரன்

வீரரொருவரின் தலைக்கனம் அணியின் குறிக்கோளுடன் முரண்பட்டுக் கொள்கின்ற சந்தர்ப்பங்கள் உண்டா?

உண்மையில் கிடையாது. அது அனைவரதும் தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் கௌரவத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். அது நீங்கள் உருவாக்குகின்ற அணி கலாச்சாரம். நீங்கள் அந்த கலாச்சாரத்தை உருவாக்கிய பிறகு அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினமான இருக்கும்

ஏனைய வீரர்கள் அந்த வீரரை அணியின் மட்டத்திற்கு கொண்டு வருவார்கள். நீங்கள் அவ்வாறான சூழலை அணியில் உருவாக்கவில்லை என்றால் உங்களால் அதனை கட்டுப்படுத்த முடியாத விடயம் என்பதனாலும், மனிதர்களின் குணாதிசயங்கள் மாறுவதனாலும் உங்களுக்கு நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

எனவே, நீங்கள் அணியில் கலாச்சாரமொன்றை உருவாக்கி அந்த கலாச்சாரத்தில் அவ்வாறான வீரர்களை உள்வாங்கிய பிறகு நிலைமையை கட்டுப்பாடுக்குள் கொணடு வருவது இலகுவான விடயம். அதன்மூலம் அவர்களுக்கும் கருத்துச் சொல்கின்ற சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்போம்

தொடர்ந்து சில காலங்களாக அணியில் குறைந்தளவு செயல்திறனைக் கொண்ட திறமையான வீரரொருவர் அணியில் இருக்கும் போது அவ்வாறான நிலைமையை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?

நான் வீரரொருவரின் திறமை இருக்கின்ற அல்லது இல்லாத காலத்தை நம்புவதில்லை. சில சமயம் நீங்கள் இன்னும் பந்தை நடு மட்டையில் வைத்து அடிக்கின்ற போது அது சரியான இலக்கை சென்றடையாது. அனைத்து வீரர்களுக்கும் அவ்வாறான நெருக்கடியான காலத்துக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்

ஆனால் அவரே தன்னுடைய தவறினை புரிந்து கொள்வார். அதை தவிர்த்துக் கொள்ள அவருக்கு ஏதாவது நம்பிக்கையொன்று தேவைப்படும். இல்லாவிட்டால் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் இடம்பெற வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது

சில நேரங்களில் நீங்கள் தவறான துடுப்பாட்ட பிரயோகத்தை மேற்கொண்ட பிறகு இரண்டு நல்ல பந்துகள் கிடைக்கலாம். ஆனாலும் நீங்கள் சடுதியாக தொடர்ந்து 4 இன்னிங்ஸ்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். அதை நீங்கள் தான் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்

ஆம். நீங்கள் மோசமான இரண்டு துடுப்பாட்ட பிரயோகங்ளை மேற்கொண்டிருப்பீர்கள். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். ஆனாலும் இரண்டு நல்ல பந்துகளும் உங்களுக்கு வந்தன.  

ஒவ்வொரு வீரருக்கும் நீங்கள் கதைக்கின்ற விதம் மற்றும் விடயத்தை தெளிவுபடுத்துகின்ற விதம் வெவ்வேறாக இருக்கும். இதில் முக்கியம் என்னவெனில் யார் வீரர் மற்றும் அவர் எவ்வாறு சிந்திப்பார் என்பது குறித்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவர்களை வற்புறுத்தாமல் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து நீங்கள் உதவி செய்ய வேண்டும்.  

உங்களுக்கு தேவையான விதத்தில் உடை மாற்றும் அறையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்பதை உங்களுடைய தலைமைத்துவத்திள் கீழ் எப்போதாவது உணர்ந்து இருப்பீர்களா

அவ்வாறு நடந்தது கிடையாது. நான் செய்கின்ற எந்த வேலையிலும் நேர்மையாக இருப்பேன். கடந்த காலங்களில் என்னுடன் விளையாடிய பல வீரர்கள் மற்றும் தற்போது எனது முகாமைத்துவத்தின் கீழ் உள்ள வீரர்கள் இதை நன்கு அறிவார்கள்

எம்மால் மிகவும் பயங்கரமான முறையில் நேர்மையான உரையாடலை வீரர்களுடன் முன்னெடுக்கலாம். நான் அவ்வாறு தான் செய்வேன். அனைவரும் தொழில்சார் வீரர்களைப் போல அனைவரும் வயது முதிர்ந்தவர்கள்

நீங்கள் அவ்வாறானதொரு புரிந்துணர்வுமிக்க கௌரவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதைப் போல கோட்பாடுகள் இல்லாவிடின் வீரர்கள் அவற்றை நன்கு புரிந்து கொள்வார்கள்

தலைவராகவோ அல்லது பயிற்சியாளராகவோ நான் உதவி செய்வேன். நான் எப்போதும் வீரர்களின் பக்கம் தான் நிற்பேன்

சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல

நீங்கள் தற்போது வியாரம் ஒன்றை நடத்தி வருகிறீர்கள். சமூகசேவைகள் பலவற்றில் ஈடுபட்டு வருகின்றீர்கள். அதேபோல ஒரு தகப்பன். அந்த அனுபவங்களுடன் உங்களுடைய தொழிலையே செய்கின்ற நபருடன் நடந்துகொள்ளும் விதத்தில் மாற்றங்கள் செய்து இருக்கின்றீர்களா?

எனக்கு அது தொழில் கிடையாது. அதுதான் இங்கு மிகவும் முக்கியமான விடயமாகும். நான் வேறு ஏதாவது செய்யும் போது அனைத்திலும் நடுநிலையைப் பேணி வருவேன். நான் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புபடும் போது அந்தப் பகுதி எனது மனநிறைவாக இருக்கும். அது எனக்கு சவாலாக இருக்கும். ஆனால் அதை நான் ஒருபோதும் தொழிலாக நினைத்தது கிடையாது. அதை செய்வதற்கு எனக்கு மிகவும் இலகுவாக இருப்பதால் நான் அவ்வாறு நினைப்பேன்

அதேபோல நான் ஒருபோதும் தவறான காரணத்துக்கான முடிவெடுக்க மாட்டேன். அதை சார்ந்து இருக்கவும் மாட்டேன்

வியாபாரத்தின் மூலம் நான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அது எனக்கு புதிய விடயம். நான் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடி நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன்

ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சவாலான புதிய விடயங்கள் இருக்கும். அதற்காக நீங்கள் தயாராக வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அதை நீங்கள் தான் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும்

அது வியாபாரத்தில் சாதாரண விடயம். நீங்கள் வாய்ப்பைத் தேடிச் செல்லும் போது சவால்களையும் சந்திக்க வேண்டி நேரிடும்

இலங்கையில் ஐ.சி.சி. இன் பாரிய தொடர்கள் நடைபெறுமா?

சில சந்தர்ப்பங்களில் அது வெற்றியைக் கொடுக்கும். சில நேரங்களில் தோல்வியில் முடியும். நீங்கள் செய்கின்ற காரியம் என்ன? சிந்தனை எப்படியானது என்பன குறித்து நீங்கள் அறிந்து கொள்ளும் வரை அந்தப் பயணத்தை தொடரலாம்

நீங்கள் தவறிழைத்துவிட்டீர்களா அல்லது சரியான முடிவை எடுத்திருப்பீர்களா என்பது குறித்து தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அது குறித்த நாளில் நடக்காமலும் இருக்கலாம்

உங்களது தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அணி சிறந்த நிலையில் காணப்பட்டது. மும்பை அணியுடன் கடமையாற்றிய 3 வருடங்களில் 2 தடவைகள் அந்த அணி சம்பியன் பட்டத்தை வென்றது. போட்டித் தொடரொன்றுக்காக வீரர்களை நீங்கள் எவ்வாறு தயார்படுத்துவீர்கள்?

மனநிலை தான் முக்கியம். விளையாட்டை சிக்கலாக்காமல் தயார்படுத்த முயற்சி செய்ய வேண்டும். கிரிக்கெட் விளையாட்டு மிகவும் இலகுவானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது புள்ளிகள் மற்றும் விக்கெட்டுக்களோடு தொடர்புடைய விடயம். அதைச் செய்ய நீங்கள் வீரர்களை சித்தப்படுத்த வேண்டும்

இலங்கையில் ஐ.சி.சி. இன் பாரிய தொடர்கள் நடைபெறுமா?

அதற்கு உத்திகள் மற்றும் திட்டமிடல் உதவும். ஆனால் முக்கியமாக நீங்கள் வீரர்களுக்கு உள்ளுணர்வாகவும் விரைவாகவும் செயல்பட வாய்ப்பளிக்கிறீர்கள். அதற்கு சரியான சூழல் மிக முக்கியமான விடயம் என்று நான் எப்போதும் நினைக்கிறேன். நீங்கள் அதை உருவாக்கியதும், வீரர்கள் மைதானத்துக்குச் சென்று விளையாடுவார்கள். அது அவர்களின் இயல்பு.

போட்டி வடிவங்களில், எல்லோரும் மண்டலத்திற்குள் நுழைந்து சிறிது நேரம் அங்கேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய போட்டித் தொடர்களில் நீங்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் சந்திக்கலாம். ஆனால் போட்டியின் முடிவில், அனைவரின் புத்துணர்ச்சியும் திறமையும் முன்னேறுவதை உறுதிசெய்ய வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு அந்த சக்தி கடைசி நேரத்தில் தான் தேவைப்படும்.

5 கி.மீ அல்லது 10 கி.மீ ஓடும்போது, நீங்கள் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்துகிறீர்கள். ஆனால் அந்த கடைசி வாய்ப்புக்கு உங்களுக்கு நிறைய சக்தி தேவை. நீங்கள் அதை கண்டுபிடிக்க வேண்டும். அதைச் செய்வதற்கு உங்களிடம் அமைதியான மற்றும் ஒன்று சேர்கின்ற வீரர்கள் இருக்க வேண்டும்.

ஐசிசி T20I உலகக் கிண்ணம் நடைபெறுவதில் சிக்கலா?

நீங்கள் விளையாடும்போது காணப்பட்ட தரவுகள், இப்போது இருப்பதைப் போல விளையாட்டின் மிகப்பெரிய பகுதியாக இருக்கவில்லை. எனவே உங்களது டி20 அணியில் வீரர்களின் தரவுகளை எந்தளவு தூரத்துக்கு பொருத்தப்படுத்துகிறீர்கள்?

தரவு முகாமைத்துவம் என்ன சொல்கிறது மற்றும் தேவையான வடிவங்கள் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தரவு நிச்சயமாக போட்டியில் உள்ள வீரர்களுக்கு உதவாது. அவர்களின் விளையாட்டின் சில அம்சங்களைப் பற்றி அவர்களிடம் பேசலாம்

ஆனால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே. இவ்வளவு தரவு மற்றும் பகுப்பாய்வு என்பன மிகப் பெரியளவில் நடந்து கொண்டிருப்பதால், அவற்றில் எதைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடிப்பது சவாலின் ஒரு பகுதியாகும்.

சில வீரர்கள் தரவைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் அதை விரும்புவோருக்கு உதவ வேண்டும். மற்றவர்கள் தங்கள் சொந்த வழியில் விடயங்களை செய்ய விரும்புகிறார்கள். சிலர் இயற்கையாகவே திறமையான வீரர்கள் மற்றும் இயல்பாக இருக்க விரும்புகிறார்கள். நான் விளையாடும்போது அத்தகைய வீரராகத் தான் இருந்தேன்.

ESPN cricinfo இணையத்தளத்தின் இலங்கைப் பிரதிநிதி ஆண்ட்ரூ பிடல் பெர்னாண்டோவுக்கு மஹேல ஜயவர்தன அளித்த பேட்டியின் தமிழலாக்கம் இது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<