தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் தியகமவில்

97

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை (10) நடைபெறவுள்ளது.

இருபாலாருக்குமாக 4 வயதுப் பிரிவுகளில் நடைபெறவுள்ள இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என நாடு முழுவதிலும் இருந்து 2,000க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

16 வயதின்கீழ், 18 வயதின்கீழ், 20 வயதின்கீழ், 23 வயதின்கீழ் என நான்கு வயது பிரிவுகளில் மொத்தம் 99 போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை போட்டித் தொடரில் நடைபெறவுள்ளன. இதில் போட்டிகளின் முதல் நாளன்று 25 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த ஆண்டைப் போல இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 23 வயதுக்குட்டவர்களுக்கு போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ட்ரினிடாட் அண்ட் டொபேகோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கின்ற ஒரு போட்டித் தொடராக இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<