ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
ஸ்கொட்ஸ்டூன் விளையாட்டரங்கில் நேற்று (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க உட்பட உலகின் முன்னணி 12 ஈட்டி எறிதல் வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். குறிப்பாக, உலக சம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் மற்றும் அதே ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் இப்போட்டியில் களமிறங்கியிருந்தனர்.
இதில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்கவின் முதலாவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எனினும், இரண்டாவது முயற்சியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்துக்கு முன்னேறினார். அதுவே அவர் தங்கப் பதக்கத்தை சுவீகரிப்பதற்கான எறிதலாக மாறியது. தொடர்ந்து மூன்றாவது முயற்சியில் அதனைவிட தூரத்திற்கு ஈட்டியை ருமேஷ் தரங்க எறிவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அவரது அடுத்த மூன்று முயற்சிகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
இப் போட்டியில் இந்திய வீரர்களான நீராஜ் சொப்ரா (85.83 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், யாஷ் விர் சிங் (85.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான பாகிஸ்தான் வீரர் அர்ஷ்hத் நதீம் 77 மீற்றர் தூரம் வீசி 9ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
>>யுபுன் அபேகோன் சர்வதேச தடகளத்தில் இருந்து திடீர் ஓய்வு<<
எனவே, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம்; ருமேஷ் தரங்க பல வரலாற்று சாதனைகளையும் படைத்தார்.
இதில் 1950இல் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 440 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டன்கன் வைட்டுக்குப் பின்னர் (76 ஆண்டுகளுக்குப் பிறகு) பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற பெருமையை ருமேஷ் தரங்க பெற்றுக்கொண்டார். அதுமாத்திரமின்றி, மெய்வல்லுநர் போட்டியில் மைதான நிகழ்ச்சியில் ஒன்றில் இலங்கை பொதுநலவாய விளையாட்டு விழாவில் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் தங்கப் பதக்கமாகவும் இது வரலாற்றில் இடம்பிடித்தது.
மேலும், 2006 மெல்போர்ன் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் சின்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
88 ஆண்டுகால பொதுநலவாய விளையாட்டு விழா வரலற்றில் இலங்கை வென்ற ஐந்தாவது தங்கம் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் குத்துச்சண்டை வீரர் பெர்னி ஹென்ரிக்ஸ் (1938 – சிட்னி), மெய்வல்லுநர் வீரர் டங்கன் வைட் (1950 – ஒக்லாந்து), துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைகளான புஷ்பமாலி ராம்நாயக்க மற்றும் மாலி விக்கிரமசிங்க (1994 – விக்டோரியா), மற்றும் பளுதூக்குதல் வீரரான சிந்தன கீதால் விதானகே (2006 – மெல்போர்ன்) ஆகிய வீரர்கள் பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற 5ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார். இதற்கு முன் டங்கன் வைட் (1950 – 440 மீற்றர் தடை தாண்டல்), ஸ்ரீயானி குவன்ச (1998 – 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), சுகத் திலனரட்ன (1998 – 400 மீற்றர்) மற்றும் யுபுன் அபேகோன் (2022 – 100 மீற்றர்) ஆகிய வீரர்கள் பதக்கங்களை வென்றிருந்தனர்.
அதேபோல, இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க எறிந்த தூரமானது (89.75 மீ), பொதுநலவாய விளையாட்டுப் விழா வரலாற்றில் ஈட்டி எறிதல் பிரிவில் பதிவான இரண்டாவது மிகச் சிறந்த தூரமாக பதிவாகியுள்ளது. இதில் முதலிடத்தில் பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் எறிந்த 90.18 மீற்றர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக சர்வதேசப் போட்டிகளில் சோபித்து வரும் ருமேஷ் தரங்க, சமீபத்தில் இத்தாலியின் ரோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து புதிய இலங்கை சாதனையைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<






















