ஜக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ஆகியன இணைந்து 2014ஆம் ஆண்டு முதல், விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய, நவீன ஒலிம்பிக் தொடங்கப்பட்ட 1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியை மேம்பாடு மற்றும் அமைதிக்கான “சர்வதேச விளையாட்டு தினம் (IDSDP)” என கொண்டாடுவதாக பிரகடணப்படுத்தி, 2014ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகின்றனர்.

3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இத்தினம் தொடர்பான விழிப்புணர்வு என்பது உலகளாவிய ரீதியில் வீரர்களிடமும் பொதுமக்களிடமும் போதுமானதாகவில்லை.

பிரேசில் சர்வதேசக் கிண்ணத்தை கைப்பற்றினார் இலங்கையின் நிலுக கருணாரத்ன

இலங்கையின் பூப்பந்தாட்டச் சம்பியன் நிலுக கருணாரத்ன 2017ஆம் ஆண்டிற்கான 32ஆவது..

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினுடைய கற்கைகள் பணிப்பாளரான சிவராஜா கோபிநாத் தலைமையிலான தன்னார்வலர் குழு IDSDP இனை பிரபல்யப்படுத்துவதற்காக பல்வேறு செயற்திட்டங்களை இவ்வருடம் மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் IDSDP தொடர்பான ஊடக சந்திப்பு மற்றும் உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு ஆகியன இடம்பெற்றது.

நிகழ்வில் கோபிநாத் அவர்கள் IDSDP தொடர்பான அறிமுகத்தை வழங்குகையில் “2014ஆம் ஆண்டில் IDSDP முதன் முறையாகக் கொண்டாடப்பட்டாலும், அப்போது அது தொடர்பான விழிப்புணர்வு இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டில் நான் இது தொடர்பாக அறிந்து இலங்கையிலேயே முதல் தடவையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு மற்றும் நட்புறவு ரீதியிலான போட்டிகள் என்பன நடாத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஒரு நடைபவனியையும் சில விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியிருந்தோம்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் இவ்வருட நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கையில் “இவ்வருடம் 7 செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

செயற்திட்டம் 1 – இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் துணைவேந்தர்கள், விளையாட்டு பிரிவின் பணிப்பாளர்கள் மற்றும் போதனா ஆசிரியர்களுக்கு IDSDP தொடர்பான கையேடு ஒன்றினை தயார்செய்து மின்னஞ்சல் செய்துள்ளோம்.

செயற்திட்டம் 2 – முகப்புத்தக முகப்பு படம் (Facebook profile overlay) ஒன்றைத் தயார் செய்து பிரபல்யப்படுத்தல். (அதற்கான இணைப்பு – http://profile.actionsprout.com/o/144116)

செயற்திட்டம் 3 – ஊடக சந்திப்பினை நடத்துதல்

மக்களை நோக்கி செய்தியை எடுத்துச் செல்லும் முகவர் என்ற ரீதியில், IDSDP தொடர்பாக ஊடகங்களைத் தெளிவுபடுத்தல்.

செயற்திட்டம் 4 – சர்வதேச விழிப்புணர்வு பாடல் வெளியிடுதல். (ஆங்கில மொழி)

>> பாடல் இணைப்பு <<

செயற்திட்டம் 5 – தேசிய விழிப்புணர்வு பாடல் வெளியீடு. (தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இணை மொழிப் பாடல்)

செயற்திட்டம் 6 – பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தனியார் கல்லூரிகள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றை இத்தினம் தொடர்பான விழிப்புணர்வு கருந்தரங்குகள், நடைபவனி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை நடாத்தத் தூண்டுதல்.

செயற்திட்டம் 7 – வெள்ளை அட்டை செயற்திட்டம்

ஆசிய கிரிக்கெட் சபையின் வளர்ந்துவரும் அணிகளின் சம்பியனாக முடிசூடிய இலங்கை

சிட்டகொங், சஹூர் அகமத் சௌத்ரி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ண…

“விளையாட்டின் மூலம் சமாதானம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதை நான் ஆதரிக்கின்றேன்” என்பதனை வெளிப்படுத்தும் முகமாக கையில் ஒரு வெள்ளை அட்டை/ தாளுடன் “#idsdp, #idsdp2017, #WhiteCard, #WePlayTogether, #iplayforSDGs“ எனும் ஹாஷ்டெக்கினை (Hastag) பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றல் (upload)” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் “இத்தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் விளையாட்டினது பெறுமதி, அதன் மூலம் வளர்க்கப்படும் விடயங்கள் ஆகியவற்றையும் விளையாட்டினது நோக்கம் தொடர்பான தெளிவுபடுத்தலை ஏற்படுத்தல் என்பதாகும்” எனத் தெரிவித்தார்.

பானுஜா ஜயசூரிய அவர்கள் விளையாட்டினுடான மகளிர் மேம்பாடு மற்றும் விளையாட்டில் பெண்களின் பங்கெடுப்பு என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கையில்

“விளையாட்டு மற்றும் அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.  ஏனைய பகுதிகளில் அவர்களது பங்குபற்றல் வீதம் அதிகரித்து வருகின்ற போதும் வடக்கில் அவ்வாறில்லை. விளையாட்டுத்துறையில் பெண்களின் பங்கெடுப்பு குறைவாக இருப்பதற்கு பிரதான காரணம் அவர்களிடம் உள்ள ‘பெண்கள் குடும்பத்தோடு மட்டும் நின்றுவிட வேண்டும்’ என்று அவர்கள் கொண்டிருக்கும் எண்ணமும் சமூகம் கொண்டிருக்கிம் அவ்வாறான பார்வையுமே காரணமாகும். இவை அகன்று பெண்களுடைய பங்களிப்பென்பது சகல துறைகளிலும் அதிகரிக்கையில் நிலையான அபிவிருத்தி என்பதனை இலகுவில் அடைந்துவிடலாம். விளையாட்டு தன்னம்பிக்கையினைக் கொடுக்கும், அந்நம்பிக்கை அவர்களது எதிர்காலத்தில் சகல விடயங்களிலும் பலம் சேர்க்கும்” என்றார்.

உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை T20 அணி : குசல் மென்டிஸ் நீக்கம்

செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்கு..

இசையமைப்பாளர் மதீசன் தனபாலசிங்கம் தனது அனுபவம் குறித்துத் தெரிவிக்கையில் “IDSDP இற்கான உத்தியோகபூர்வ பாடலை நாம் தயாரித்தமை குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அதிலும் சிறிய இலங்கைத் தீவிலிருந்து சர்வதேசத்திற்கு ஓர் பாடல் வெளியிடுவதில் பெருமகிழ்வடைகின்றேன். இப்பாடலில் பணியாற்றியவர்களுள் நான், வோல்ரா மற்றும் சசிகரன் ஆகியோரைத் தவிர ஏனைய அனைவரிற்கும் இதுவே முதற் பாடல். அதிலும் சகலரும் இளைஞர்கள் என்பது பெருமைக்குரிய விடயம். விளையாட்டினூடே சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்கிட முடியும், அதற்கென அனைவரும் இணைந்து பயணித்திடுவோம்” என்றார்.

IDSDP இணைப்பாளர்களுள் ஒருவரான இந்திரஜித் குமார கருத்துத் தெரிவிக்கையில் “யாழ்ப்பாணம் பற்றியும் தமிழர் பற்றியும் ஏதும் அறியாது இங்கு வந்து அனைவரும் இணைந்து இன்று ஒரு சர்வதேச தரத்திலான படைப்பு ஒன்றினை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது விளையாட்டில் மட்டும் இலங்கையராக இணைந்திருக்கும் நாம் ஏனைய துறைகளில் தனித்தே இருக்கின்றோம். இந்நிலை மாறி அனைவரும் விளையாட்டின் ஊடான மாற்றத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையான சமாதானம் நிறைந்த தேசத்தினை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்ற கோரிக்கையை விடுத்தார்.

IDSDP இன் ஊடக இணைப்பாளர் ரவிவர்மன் அருமைக்கிளி “தற்காலத்தில் அநேக விளையாட்டு வீரர்கள் விளையாட்டின் நோக்கம் என்ன என்பதனை அறியாமலே விளையாடி வருகின்றனர். அவர்களை வழிப்படுத்தி விளையாட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஊடகங்களிடமே உண்டு. இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் சாதனையாளராய் மாற்றிட ஊடகங்கள் செயற்பட வேண்டும்.” என்ற கோரிக்கையை விடுத்தார்.

தொடர்ந்தும் இரு பாடல்கள் வெளியீட்டுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. ஏப்ரல் மதம் 6ஆம் திகதி கொண்டாடப்படும் இத்தினம் இவ்வருடம் முதல் இலங்கையின் சகல பாகங்களில் மட்டுமன்றி, உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும். விளையாட்டினூடான மாற்றத்தினை ஏற்படுத்தி நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் அமைதி ஆகியவற்றை எட்டிட அனைவரும் இணைந்திடுவோம். ஒன்றிணைந்து விளையாடுவோம்!!!

  மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு