ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த ஹஷ்மத்துல்லா சஹிதி குறிப்பிட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>பங்களாதேஷ் தொடருக்கான அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம் அறிவிப்பு<<
இவரது தலைமையின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி 2023 ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2025 சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளது.
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் காணப்பட்ட ஜொனதன் ட்ரொட் குறிப்பிட்ட பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ரிச்சர்ட் பைபஸ் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தார். இது நடைபெற்று சில மாதங்களிலேயே ஹஷ்மத்துல்லா சஹிதி தலைவர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சஹிதி மற்றும் ட்ரொட் கூட்டணியின் கீழ், ஆப்கானிஸ்தான் அணி தனது ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே மிகச் சிறந்த காலகட்டத்தை கண்டிருந்தது. குறிப்பாக சஹிதி தலைமையிலான ஆப்கான் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்று, அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டிருந்தது.
31 வயதான சஹிதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.
“முழு மரியாதையுடனும் சம்மதத்துடனும், எனது சொந்த முடிவின்படி எனது அணியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதை இன்று அறிவிக்கிறேன். ஒரு தலைவராக இந்த பொறுப்பை நிறைவேற்றியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் எனது அணியுடன் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்.”
அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதை சஹிதி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அயர்லாந்திற்கு எதிராக தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான் தனது புதிய ஒருநாள் அணித் தலைவரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















