யுபுன் அபேகோன் சர்வதேச தடகளத்தில் இருந்து திடீர் ஓய்வு

Yupun Abeykoon Retirement

2
Yupun Abeykoon Retirement

100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடிய முதல் தெற்காசிய தடகள வீரரும், இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரருமான யுபுன் அபேகோன், சர்வதேச தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (21) தனது உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம், இலங்கையின் மிகவும் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற சிறந்த தடகள வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவரது விளையாட்டுப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

அவர் வெளியிட்ட உணர்வுபூர்வமான அறிக்கையில், எவ்வித மனக்குறையுமின்றி விளையாட்டுத்துறையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். தான் நாட்டுக்குக் கடன்படவில்லை என்றும், ஆனால் தனது தடகளப் பயணம் முழுவதும் கிடைத்த ஆதரவிற்கும் வாய்ப்புகளுக்கும் ஆழ்ந்த நன்றியுடையவராக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 10 விநாடிகளுக்குள் இலக்கைக் கடந்து சாதனை படைத்த ‘சப்-10 விநாடி’ (sub-10-second) உலகத் தடகள வீரர்களின் உயர்மட்டப் பட்டியலில் நுழைந்த முதல் இலங்கை மற்றும் தெற்காசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றதன் முக்கியத்துவத்தை அபேகோன் நினைவு கூர்ந்தார். தனது இந்த வெற்றி தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல என்றும், அது முழு தேசமும் பகிர்ந்துகொண்ட ஒரு வரலாற்றுத் தருணம் என்றும் அவர் கூறினார்.

தனது சர்வதேச தடகளப் பயணத்தின் போது ஆதரவளித்து பின்னால் நின்ற தனது பெற்றோர்கள், கல்வி கற்ற பாடசாலைகள், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, இலங்கை தடகள சங்கம் மற்றும் கிளாடியோ லிச்சியார்டெல்லோ (Claudio Licciardello) தலைமையிலான இத்தாலிய பயிற்றுவிப்பாளர் குழு ஆகியோருக்கு அவர் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தன் மீது நம்பிக்கை வைத்த மில்லியன் கணக்கான இலங்கை ரசிகர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

31 வயதான இவர், முக்கியமாக ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றியதுடன், இந்த இரண்டு பிரிவுகளிலுமே இலங்கையின் தேசிய சாதனையாளராகத் தொடர்ந்து நீடிக்கிறார்.

2022 ஜூலை 3 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் லா சோ-டி-ஃபோன்ஸில் (La Chaux-de-Fonds) நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9.96 செக்கன்களில் இலக்கை அடைந்ததே அவரது விளையாட்டு வாழ்வின் உச்சகட்டத் தருணமாகும். இதன் மூலம் 10 செக்கன்களுக்குக் குறைவான நேரத்தில் ஓடி சாதனை படைத்த முதல் மற்றும் ஒரே தெற்காசிய வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்தார்.

அதே ஆண்டின் பிற்பகுதியில், பெர்மிங்ஹமில் நடைபெற்ற 2022 பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றமை அவரது மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இது இலங்கை தடகள வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

மேலும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் 100 மீற்றர் பிரிவில் போட்டியிட்ட முதல் தெற்காசிய ஆண் தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அதேபோல, 2019 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வென்ற தங்கப் பதக்கமும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இராணுவ விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தமையும் அடங்கும்.

அவரது சாதனைகளின் பட்டியலை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டத்தில் ஆசிய சாதனையைத் தன்வசம் வைத்துள்ள யுபுன் அபேகோன், ஆசியக் கண்டத்தின் முன்னணி குறுந்தூர வீரர்களில் ஒருவர் என்பதை நிலைநிறுத்தியுள்ளார்.

மேலும், டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்ற முதல் இலங்கைத் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்று, நாட்டின் தடகள விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை அவர் பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளார்.

இருப்பினும், அவரது ஓய்வு பெற்றதற்கான செய்தி, இலங்கையில் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இன்னும் சிறப்பாகப் போட்டியிடும் திறன் இருக்கும்போதே விளையாட்டை விட்டு விலகுவது கடினமான முடிவு என்பதை ஒப்புக்கொண்ட அபேகோன், நாட்டின் தடகள அமைப்பில் உள்ள பரவலான சிக்கல்களும் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

தனது அனுபவங்கள் மற்றும் இலங்கை தடகளத் துறையின் தற்போதைய நிலை குறித்த கூடுதல் விவரங்களை எதிர்காலத்தில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<