T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாம் அறிவிப்பு!

ICC T20 World Cup 2022

241

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ள இந்த குழாத்தில் ஆசியக் கிண்ணத் தொடருக்கான குழாத்திலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

என்ன தவறு நடந்தது? தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பாபர் அசாம்

எனினும் ஆசியக் கிண்ணத் தொடரின்போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் வாய்ப்பை இழந்துள்ளார். அதேநேரம், உபாதை காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய அணியின் அதிகமான கேள்விகளாக இருந்த வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருடன் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்டீப் சிங் ஆகியோர் இடத்தை பிடித்துக்கொண்டனர்.

அணித்தலைவராக ரோஹித் சர்மா, உப தலைவராக கே.எல்.ராஹுல் ஆகியோருடன் துடுப்பாட்ட வீரர்களாக விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம் சுழல் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சஹால் இடம்பெற்றுள்ளதுடன், சகலதுறை வீரர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை இந்திய அணி மேலும் 4 வீரர்களை மேலதிக வீரர்களாக பெயரிட்டுள்ளது. இதில் மொஹமட் சமி, ஷிரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னோய் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இந்திய குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), கே.எல்.ராஹுல் (உப தலைவர்), விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், அர்ஷ்டீப் சிங், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரிட் பும்ரா

மேலதிக வீரர்கள் – மொஹமட் சமி, தீபக் சஹார், ஷிரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னோய்

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<