“என்னுடைய பணியின் போது பல கடினமான முடிவுகளை எடுத்தேன்” – பிரமோதய

Sri Lanka Cricket

382

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக செயற்பட்ட காலத்தில் பல கடினமான மற்றும் பிரபலமற்ற முடிவுகளை தான் எடுத்ததாக பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரமோதய விக்ரமசிங்க தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

IPL 2024 தொடரில் ஆடவிருக்கும் ரிசாப் பாண்ட்

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், “கிரிக்கெட் தேர்வுக் குழுவில் எனது பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கை கிரிக்கெட்டுக்கு கடந்த இரண்டரை வருடங்கள் சவாலான ஒன்றாக இருந்தமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

“குறித்த சவால்களை பொருட்படுத்தாமல், நானும் எனது சக தேர்வாளர்களும் இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக அமையப்போகும் பல திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிந்துள்ளோம் என்பது என்னுடைய நம்பிக்கையாகும். தற்போதைய இளம் குழாமானது அடுத்த இரண்டு வருடங்களுக்குள் சிறந்த அனுபவத்தைப் பெற்று உயரங்களை எட்டும்என சுட்டிக்காட்டினார்.

மேலும் குறித்த கடிதத்தில் “தேர்வுக்குழு தலைவர் என்ற முறையில், நான் பல கடினமான மற்றும் பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது, மேலும் இந்த முடிவுகள் இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த நலனை மனதில் கொண்டு எடுக்கப்பட்டவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் தலைவர் என்ற ரீதியில் புதிய தேர்வுக்குழுவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி அழைத்துச்செல்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் உறுப்பினர்களாக இந்திக டி சேரம், அஜந்த மெண்டிஸ், டில்ருவான் பெரேரா மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<