இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன்

205

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் பங்குபற்றவுள்ளார். 

சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் குத்துச்சண்டை கோதாவில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  

தட்டெறிதலில் பருத்தித்துறை ஹார்ட்லி மாணவன் சானுஜனுக்கு முதல் தங்கம்

ஐரோப்பாவில் நடைபெறுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான மிகப் பெரிய குத்துச்சண்டைப் போட்டி இதுவாகும்

இந்த நிலையில், குறித்த போட்டித் தொடரில் முதல்தடவையாக இலங்கையிலிருந்து ஏழு பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்தடவையாகும்.  

இதன்படி, ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஷானுஜன் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளார்

தனது ஆரம்பக் கல்வியை யாழ். தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயத்தில் மேற்கொண்ட ஷானுஜன், .பொ. சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த பிறகு பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் உயர்தரம் கற்பதற்கு நுழைந்தார்

இதேநேரம், ஆரம்பத்தில் குண்டு எறிதல் போட்டியில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தி வந்த ஷானுஜன், ஹார்ட்லி கல்லூரிக்கு வந்த பிறகு அந்தக் கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்றுநரான வடிவேஸ்வரன் ஹரிகரனின் வழிகாட்டலுடன் தட்டெறிதல் போட்டியிலும் கவனம் செலுத்தினார்

இதன்பிரதிபலனாக கடந்த வருடம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்தார். எனினும், அவரால் தேசிய மட்டப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில், இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஷானுஜன், தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றதுடன், முதல்தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனையும் படைத்தார்.

இந்த நிலையில், இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த ஷானுஜன், தட்டெறிதல் போட்டியில் முதல்தடவையாக தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்

இதுஇவ்வாறிருக்க, 2018ஆம் ஆண்டு முதல் குத்துச்சண்டை விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்ற ஷானுஜன், இதுவரை தேசிய மட்டத்தில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்

இதில் 75 + 81 எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கனிஷ் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் அடுத்தடுத்து பெற்றுக் கொண்டார்

இதேநேரம், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் குத்துச்சண்டைப் போட்டி மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்திய ஷானுஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்

யாழ். ஹார்ட்லி மாணவன் மிதுன்ராஜ் குண்டு எறிதலில் புதிய சாதனை

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் …………

இந்த நிலையில், ஷானுஜனின் பயிற்சியாளராக நலின் ஹெட்டியாரச்சி செயற்பட்டு வருகின்றார்

இதேநேரம், கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சிலும் இம்முறை போட்டித் தொடரில் கனிஷ் பிரிவில் ஆண்களுக்கான 41 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிடவுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஸ்டப்ஸ் கேடய குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றியிருந்த மன்சில், அதிசிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார். இவரது தந்தையான மன்சில் இலங்கை மேசைப்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரராவார்.

இலங்கை அணி விபரம் 

அத்தாப் மன்சில் (41 கி.கி), ஷானுஜன் (81 கி.கி), சுபான் ஹன்சஜ (49 கி.கி), கவீஷ மனதுங்க (52 கி.கி), நிசல் ரங்கன பண்டார (52 கி.கி), விமுக் ஹெட்டியாரச்சி (56 கி.கி), சேத்திய ஏக்கநாயக்க (60 கி.கி)

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<