தம்மை கேலி செய்த நெய்மாருக்கு நன்றி கூறிய ஹாலன்ட்

76
Haaland responds to Neymar

ஜெர்மனியின் பொருசியா டொர்ட்முண்ட் வீரர் ஏர்லிங் ஹாலன்ட் கோல் பெறும் கொண்டாட்டத்தை கேலி செய்த நெய்மார் முதற்கொண்டு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) வீரர்களுக்கு அவர் (ஹாலன்ட்) நன்றி தெரிவித்துள்ளார்.

ஹாலண்டை திட்டமிட்டு கேலி செய்த நெய்மார்

கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில்…

பிரான்ஸின் PSG மற்றும் டொர்ட்முண்ட் அணிகளுக்கு இடையில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியின்போது மற்றும் அந்தப் போட்டி முடிவில் நெய்மார் மற்றும் PSG வீரர்கள் எதிரணி வீரர் ஹாலன்டின் கோல் கொண்டாட்டத்தை பின்பற்றி அவரை கடுமையாக கேலி செய்தனர்.

இதில் அந்தச் சுற்றின் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் கட்டப் போட்டி ஜெர்மனியில் உள்ள டொர்ட்முண்ட் கழகத்தின் சிக்னல் இன்டுனா பார்க் மைதானத்தில் நடைபெற்றதோடு அதில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. இதன்போது ஹாலன்ட் இரட்டை கோல்களை பெற்றார். இந்த இரண்டு கோல்களின்போதும் அவர் தியானம் செய்வது போன்று அமர்ந்து தமது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

எவ்வாறாயினும் PSG அணியின் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் போட்டியில் நெய்மார் மற்றும் ஜுவான் பெர்னட் பெற்ற கோல்கள் மூலம் 2-0 என வெற்றி பெற்ற அந்த அணி தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் டொர்ட்முண்ட் தொடரில் இருந்து வெளியேறியது.

எவ்வாறாயினும், PSG வீரர்கள் இந்தப் போட்டியில் ஹாலன்ட் தியானத்தில் இருந்த கொண்டாட்டத்தை பின்பற்றி அவரை கேலி செய்தனர். இது பற்றி கருத்துக் கூறிய ஹாலன்ட் இதனால் தாம் கவலை அடையவில்லை என்றும் தியானம் செய்வதன் முக்கியத்துவத்தை உலகுக்கு காண்பிப்பதற்கு அவர்கள் செய்த பங்களிப்புக்கு நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“தியானம் பற்றி உலகுக்கு அறிமுகம் செய்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் எனக்கு உதவி புரிந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே அதற்காக உதவி செய்ததற்காக நான் அவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்” என்றார் ஹாலன்ட்.

இதில் அவர் மேலும் கூறும்போது போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமக்கு முன்மாதிரியான வீரர் என்று தெரிவித்துள்ளார்.

“நான் நிச்சயம் கோல் பெறுவேன் என்பது போன்ற திடமான மனநிலையை ரொனால்டோவின் முகத்தை பார்க்கும்போதே கூற முடியும். அவர் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக அதனை செய்திருக்கிறார். அவரது மன உறுதி, வெற்றி அளிப்பதோடு அந்தத் தருணத்தில் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்ற அவரிடம் இருக்கின்ற ஆர்வத்தைத் தான் நான் மிகவும் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று, டொர்ட்முண்ட் அணிக்காக விளையாடி பெற்றுக்கொண்ட வெற்றிகரமான தொடக்கம் பற்றியும் தாம் மகிழ்ச்சியடைவதாக ஹாலன்ட் மேலும் தெரிவித்தார்.

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில்..

“டொர்ட்முண்ட் அணியுடன் முதல் போட்டியில் இருந்தே சிறந்த ஆரம்பம் ஒன்றை பெறுவதற்கு என்னால் முடிந்தது. அது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, இவ்வாறான வெற்றிகரமான சந்தர்ப்பத்தில் சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பது தான் எனது வாழ்வுக்கு மிக முக்கியம். அதனால் முடியுமான வரை அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதற்கே நான் முயற்சிக்கிறேன்.

நான் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைகிறேன் என்று நினைக்கிறேன். நான் முன்னர் விளையாடிய சல்ஸ்பர்க் அணியை மதிக்கும் அதேவேளை அவர்களை விடவும் சிறந்த வீரர்களுடன் விளையாட கிடைத்திருப்பதும் அதற்குக் காரணமாகும். ஏனென்றால், என்னை மேலும் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்ல அவர்களால் முடியும். எனவே நான் அது பற்றி மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

19 வயதே ஆன ஹாலன்ட் கடந்த ஜனவரி மாதம் டொர்ட்முண்ட் கழகத்துடன் இணைவதற்கு முன்னர் சல்ஸ்பர்க் அணிக்காக ஆடி அந்த அணிக்காக இந்தப் பருவத்தில் அனைத்துப் போட்டிகளிலும் 28 கோல்களை பெற்றார். தொடர்ந்து டொர்ட்முண்ட் அணியுடன் இணைந்த பின்னரும் உச்ச திறமையை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை அந்த அணிக்காக 11 போட்டிகளில் 12 கோல்களை பெற்றுள்ளார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<