டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு 8 வருட தடை விதித்த ஐசிசி

ICC Match Fixing Investigations

126
ICC

ஐசிசியின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு, 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டில்ஹார லொக்குஹெட்டிகேவால், அவருக்கான தடைக்காலத்துக்கு உட்பட்ட காலப்பகுதியில், எவ்வித கிரிக்கெட் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமனம்

லொக்குஹெட்டிகேவுக்கான 8 வருட தடைக்காலம், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதியிலிருந்து கணிக்கப்படும் எனவும், ஐசிசியால் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லொக்குஹெட்டிகே மீது ஐசிசி சுமத்தியிருந்த, மூன்று வகையான ஊழல் தடுப்பு குற்றச்சாட்டு, ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் மூலம் கடந்த ஜனவரி மாதம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. குறித்த மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டில்ஹார லொக்குஹெட்டிகே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் டில்ஹார லொக்குஹெட்டிகேவின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த குற்றம் உறுதிசெய்யப்பட்டு அவருக்கான தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.

பின்னர், இந்த குற்றச்சாட்டுகளை அவருக்கான உரிமைகள் அடிப்படையில், ஐசிசி மூன்று பேர்கொண்ட சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தினை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே இவர், குற்றம் செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான தண்டனை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீதான குற்றச்சாட்டுகள் :

சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.

சரத்து 2.1.4 –  விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்.

சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி குறிப்பிட்ட ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.

டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து ஐசிசியின் பொது முகாமையாளர் அலெக்ஷ் மார்ஷெல் கருத்து வெளியிடுகையில், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய டில்ஹார லொக்குஹெட்டிகே, ஊழல் தொடர்பான பல விடயங்களில் தொடர்புக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது, அவர் மேற்கொண்ட குற்றத்தின் ஆழத்தை வெளிப்படையாக காட்டுகிறது என்றார்.

இலங்கை தேசிய அணியில் 2005-2013ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடிய டில்ஹார லொக்குஹெட்டிகே, 2 T20I போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க