லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி ஏழாவது தடவையாக அவுஸ்திரேலிய அணி சம்பியனாக முடிசூடியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், அணித்தலைவி நட் ஸ்கேவியர் பேர்ன்டின் அரைச்சதத்தின் உதவியுடன் இன்னிங்ஸை கட்டியெழுப்பியது.
>>செனுஜ, கவிஜவின் போராட்டம் வீண்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா U19 அணி<<
தொடர்ந்து களமிறங்கிய பிரெயா கெம் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கிம் கார்த் மற்றும் லூசி ஹெமில்டன் ஆகியோர் சிறந்த ஓட்டக்கட்டுப்பாட்டு ஓவர்களுடன் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சோபி மொலினக்ஸ் மற்றும் எனபெல் சௌத்லேண்ட் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி பெத் மூனி மற்றும் பொஹெப் லிட்ச்பீல்ட் ஆகியோரின் இரண்டாவது விக்கெட்டுக்கான 100 ஓட்ட இணைப்பாட்டத்தின் உதவியுடன் 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தமதாக்கியது.
பெத் மூனி 49 பந்துகளில் 64 ஓட்டங்களையும், பொஹெப் லிட்ச்பீல்ட் 35 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, தங்களுடைய 7ஆவது கிண்ணக் கனவை அவுஸ்திரேலிய அணி நனவாக்கியது.
அதேநேரம் தோல்விகளின்றி இறுதிப்போட்டிவரை பயணித்த இங்கிலாந்து அணி, தங்களுடைய இரண்டாவது உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை சொந்த மண்ணில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















