கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புக் காலம் வழங்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி அலெக்ஸ் மார்ஷலை டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி சந்தித்தபோது இந்தத் தகவலை அவர் அறிவித்தார்.
அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி கடந்த மூன்று வருடங்களாக அடைந்து வரும்…
கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக தாங்கள் அறிந்த விடயங்களையும் தங்களால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்களையும் இலங்கை வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினரிடம் அறிவிப்பதற்கு ஏதுவாக ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான பெரும்பாலான பணத்தை வழங்குவதில் சர்வதேச கிரிக்கெட் பேரவை பெரும் பங்காற்றிவருவதால் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் உரிமை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இருக்கின்றது. அதனால்தான் இந்த கால அவகாசத்தை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு முன்வந்துள்ளது.
அதேபோன்று, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடுமையான ஊழல் மோசடிகள் இடம்பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இலங்கை என சர்வதேச கிரிக்கெட் பேரவை தன்னிடம் கூறியபோது இதயம் நொந்துபோனேன். ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் பிரச்சினை இல்லை எனவும், வெளிநபர்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபை செயற்பாடுகளில் தலையிடுவதால் பிரச்சினைகள் நிலவி வருகின்றது.
இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்த மட்டில் மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை மோசடிகள் இடம்பெறுகின்றது. பாதாள கோஷ்டியினருக்கு இதில் தொடர்பு இருப்பதாக ஐ.சி.சி. சுட்டிக்காட்டியது.
இதனை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவின் நிரந்தர அலுவலகம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதற்கேற்ப இலங்கை கிரிக்கெட் சட்டத்தையும் இரண்டு மாதங்களுக்குள் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி அலெக்ஸ் மார்ஷல், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இலங்கை வீரர்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டதாகவும், விசாரணைகளின் நிமித்த அது தொடர்பில் எந்தவொரு அறிவிப்பையும் தற்போது வெளியிட முடியாது எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க