குத்துச்சண்டையில் பதக்கம் வென்று வரலாறு படைத்தது இலங்கை

276
Anusha Kodithuwakku

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா 7ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை வீரர்கள் பங்கேற்கும் குத்துச்சண்டை, மேசைப்பந்து, பெட்மிண்டன் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் இன்றைய தினம்(11) இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணிக்கு 3ஆவது வெண்கலப் பதக்கத்தை அனூஷா தில்ருக்ஷி கொடித்துவக்கு பெற்றுக்கொண்டார்.

அதிவேக வீரராக அக்கானியும், வீராங்கனையாக மிச்செலியும் முடிசூடினர்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற..

பெண்களுக்கான 45 – 48 கிலோ எடைப்பிரிவிற்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் 5 முறை உலக சம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கொம்மை இலங்கையின் நட்சத்திர வீராங்கனை அனூஷா தில்ருக்ஷி எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அபாரமாக விளையாடிய அனூஷா முதலிரண்டு சுற்றுக்களிலும் மோரி கொம்முக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்தார்.

எனினும். மேரி கொம்மின் ஒரு சில மதிநுட்பமான தாக்குதலினால் பின்னடைவை சந்தித்த அனூஷாவுக்கு, மேரி கோம்மை வீழ்த்த முடியாது போனது.

இறுதியில், மேரி கோம் 30-27, 30-27, 30-27, 30-27, 30-27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

எனினும், 2ஆவது தடவையாகவும் மேரி கொம்முடன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அனூஷா, பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவிலும் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இவ்விரு வீராங்கனைகளும் மோதிக் கொண்டதுடன், இதில் மேரி கொம் தங்கப் பதக்கம் வென்றார்.

எனினும், மேரி கொம்மின் தாக்குல்களினால் குறித்த போட்டியின் போது அனூஷாவின் காலில் பலத்த முறிவு ஏற்பட்டதுடன், போட்டியிலிருந்து இடைநடுவே விலகிக்கொண்டார்.

குத்துச்சண்டையில் இலங்கை வீரர்களுக்கு பதக்கங்கள் பெறும் வாய்ப்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று…

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்த 39 வயதுடைய அனூஷா தில்ருக்ஷி, மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளில் களமிறங்கி இன்றைய தினம் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனையும் படைத்துள்ளமை முக்கிய அம்சமாகும்.

அத்துடன், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தையும், 68 வருடங்களுக்குப் பிறகு குத்துச்சண்டைப் பிரிவில் முதல் பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்த வீராங்கனையாகவும் அனூஷா தில்ருக்ஷி வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதேவேளை, போட்டியின் பிறகு அனூஷா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”2014ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெறத் தவறிய பதக்கத்தை இம்முறை பெற்றுக்கொண்டுள்ளேன். எதுஎவ்வாறாயினும், குத்துச்சண்டைப் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பதையிட்டு பெருமையடைகிறேன்.

அதேநேரம், மேரி கொம்மைப் பற்றி நான் நன்கு அறிவேன். தெற்காசிய விளையாட்டு விழாவில் அவருடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினேன். அப்போட்டியில் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக துரதிஷ்டவசமாக தோல்வியைத் தழுவினேன். இன்றைய போட்டியிலும் பலத்த போட்டியை கொடுக்க முடிந்தது. இறுதியில் வெண்கலப் பதக்கத்தை நாட்டுக்காக பெற்றுக்கொடுத்தேன். இது இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவமாகும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சுமார் 80 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1938ஆம் ஆண்டு நிவ் சவுத் வேல்ஸில் நடைபெற்ற பிரித்தானிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து 1950ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் எட்வின் எல்பெட் பெரேரா வெள்ளிப் பதக்கத்தையும், எலெக்ஸ் ஒபேசேகர, வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பொதுநலவாய மெய்வல்லுனரில் இறுதிப் போட்டியில் 2 இலங்கையர்

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று…

எனினும், 2010ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் மஞ்சு வன்னிஆரச்சி, தங்கப் பதக்கம் வென்றிருந்த போதிலும், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை, குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணிக்கு இன்னும் 2 பதக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதில் ஆண்களுக்கான 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவில் திவங்க ரணசிங்கவும், ஆண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவில் இஷான் பண்டாரவும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்று இலங்கைக்கு தங்கம், வெள்ளி அல்லது குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவிற்கான முதலாவது காலிறுதிப் போட்டியில் வனுஆட்டு வீரர் பெர்ரி நம்ரியை 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய திவங்க ரணசிங்க அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுதடன், இலங்கைக்கான மற்றுமொரு பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி காலை (இலங்கை நேரப்படி 8.32 மணிக்கு) நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாயை, திவங்க ரணசிங்க எதிர்த்தாடவுள்ளார்.

அரையிறுதிக்கு தகுதிபெற்ற இஷான்

ஆண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவிற்காக இன்று காலை(11) நடைபெற்ற 2ஆவது காலிறுதிப் போட்டியில் லேசோதா நாட்டு வீரர் தாபோ மொலோபியவை எதிர்கொண்ட இலங்கையின் இஷான் பண்டார, 4-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இஷான் பண்டார, எதிரணி வீரருக்கு சுதாகரித்துக்கொள்ளவே அவகாசம் கொடுக்காமல் தனது தாக்குதலை தொடர்ந்தார். இதனால் நிலைகுலைந்துபோன லேசோதா நாட்டு வீரர் போட்டியில் தோற்று வெளியேறினார்.

இந்நிலையில் இஷாரவுக்கும் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அது எந்தப்பதக்கம் என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும். இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிதிப் போட்டியில் இந்தியாவின் கௌரவ் சொலன்கியை (இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு) இஷான் பண்டார எதிர்கொள்ளவுள்ளார்.  

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<