கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்

156
Corona virus and International Football

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A, பிரான்ஸ் லீக் 1 மற்றும் ஜெர்மனி புன்டஸ்லிகா என ஐரோப்பாவின் அனைத்து பிரதான கழக மட்ட கால்பந்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கோப்பா அமெரிக்கா தொடர், 2020 யூரோ கிண்ணம் ஆகியன அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளன. 

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள், பிஃபாவின் புதிய கழக உலகக் கிண்ணம் எல்லாமே ஒத்துப்போயுள்ளன. ஒட்டுமொத்தத்தில் பிரதான கால்பந்து போட்டிகள் மாத்திரமல்ல அனைத்து விளையாட்டுகளும் ஸ்தம்பித்துவிட்டன. மைதானங்களில் காக்காய் கூட இல்லை.  

கொடிய கொரோனோ வைரஸ் எப்போது ஒழிக்கப்பட்டு எப்போது மைதானங்கள் நிரம்பி வழியும் என்று யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு வரலாற்றை நவீன உலகம் அண்மைக் காலத்தில் சந்தித்ததில்லை

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021 வரை ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த யூரோ …

சீனாவை விஞ்சி தற்போது இத்தாலியை தாக்கி இருக்கும் கொரோனா வைரஸினால் அங்கிருக்கும் முன்னணி கால்பந்து வீரர்களும் தப்பவில்லை. இதுவரை 13  சீரி A வீரர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை ஒட்டுமொத்த போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தபோதும் அத்தனை குறுகிய காலத்திற்குள் இந்த அவலத்தில் இருந்து மீள்வது கடினமாகவே தெரிகிறது. ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டு, உலக அளவில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனாவில் வீழ்ச்சிப் புள்ளி எப்போது ஆரம்பிக்கும் என்று கணிக்க முடியாதிருக்கிறது

இத்தாலியின் சம்பியன் அணியான ஜுவான்டஸின் மத்திய கள வீரர் டனிலே ருகானிக்கே முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சக வீரர் பிளைஸ் மடுடிக்கும் தொற்று பரவியது. அது ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இறுதியாக டிபாலா வைரஸ் தொற்றுக்கு உள்ளானார். ரொனால்டோ முதல் கொண்டு அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டனர்

என்றாலும் இத்தாலியின் பியோரன்டீனா கழகத்தின் மூன்று வீரர்களுக்கும் சம்டோரியா கழகத்தின் ஆறு வீரர்களுக்கும் கொவிட்-19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.  

கொரோனா வைரஸினால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கழக கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான…

மறுபுறம் முதல் ப்ரீமியர் லீக் வீரராக செல்சி அணியின் கல்லும் ஹன்டசன் ஒடொயிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனால் முழு செல்சி வீரர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானார்கள்.  

மற்றொரு அதிர்ச்சி செய்தியாக ஆர்சனல் தலைமை பயிற்சியாளர் மிகெல் ஆர்டெடாவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதனால் ஆர்சனல் கழகம் தனது மைதானம், பயிற்சி கல்லூரி அனைத்தையும் இழுத்து மூடியது

உதவிக்கு வந்த சீரி A கழகங்கள்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 ஆயிரத்தை எட்டிவிட்டது, உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. அந்நாட்டின் சோகக் கதைகள் ஏராளம். இத்தனை காலம் இத்தாலி மக்களின் பெரும் பொழுதுபோக்காக இருந்து வரும் சீரி A கழகங்கள் மற்றும் அதன் ரசிகர்கள் இந்த பயங்கரத்தில் இருந்து மீள பல மில்லியன் யூரோக்கள் நிதியை சேகரித்து வருகின்றனர்

ரோமா கழகம் தலைநகரில் இருக்கும் தேவாலயங்களுக்கு 8,000 பாதுகாப்ப கையுறைகள் மற்றும் 2,000 கையை சுத்தப்படுத்தும் கிருமி நீக்கி போத்தல்களை வழங்கியதோடு முக்கிய தேவையாக இருக்கும் 300,000 முகக் கவசங்களை பொது சுகாதார திணைக்களத்திற்கு வழங்கியது.  

தவிர இன்டர் மிலான், ரோமா, ஜுவான்டஸ் மற்றும் பியொரன்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தமது அணி சார்பில் தலா 420,000 யூரோவுக்கு அதிக நிதியை சேகரித்தனர்

தனிப்பட்ட முறையில் மிலான் முன்கள வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக், வைரஸுக்கு எதிராக பிரசாரம் ஒன்றை ஆரம்பித்து முதலாமவராக 100,000 யூரோக்களை வழங்கியிருக்கிறார்

ஸ்பால் முன்கள வீரர் அன்ட்ரீ பெடக்னா, நபோலி தலைவர் லொரென்சோ இன்சிக்னே, டொரினோ முன்கள வீரர் சிமோனே சாசா மற்றும் ஜுவான்டஸ் வீரர் பெடெரிகோ பெர்னார்டெஸ் தமக்குள் 430,000 யூரோக்கள் நிதி சேகரித்திருக்கிறார்கள். முன்னாள் இத்தாலி மற்றும் ரோமா முன்கள வீரரான பிரான்சிஸ்கோ டொட்டி ரோமில் இருக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு கொரொனா ரைவஸ் தொற்றின் அறிகுறிகளை கண்டறியும் 15 இயந்திரங்களை வழங்கியிருக்கிறார்

என்றாலும் கால்பந்துடன் தொடர்புபட்டு இத்தாலியில் பெரும் நன்கொடை வழங்கியவராக முன்னாள் பிரதமரும் முன்னாள் மினால் கழக தலைவர் மற்றும் தற்போதைய மொன்சா கழக உரிமையாளருமான சில்வியோ பிர்லுஸ்கோனி உள்ளார். அவர் வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லொம்பார்டி பிராந்தியத்தில் அவசர சிகிச்சை பிரிவுக்காக 400 படுக்கைகளை அமைக்க 10 மில்லியன் யூரோக்களை வழங்கினார்.    

சொந்த நாடுகளுக்கு உதவும் ப்ரீமியர் லீக் வீரர்கள்

கொரோனா வைரஸ் தீவிரத்தை எட்டி தற்போது தணிந்துவரும் தென் கொரியாவில் இன்னும் அதன் பாதிப்பு முடிந்தபாடில்லை. சனிக்கிழமை (21) கூட மேலும் 147 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,799 ஆக அதிகரித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது

தென் கொரிய தேசிய அணித் தலைவரும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் முன்கள வீரருமான சொன் ஹியுங் மின் 82,000 டொலர்கள் (100 மில்லியன் வொன்) நன்கொடை செய்திருக்கிறார்

இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

முழு இலங்கையினையும் கொரோனா வைரஸ் பீதி ஆட்கொண்டிருக்கும் நிலையில்,…

நாடெங்கும் முகக் கவசங்கள், கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநீக்கிகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கே தனது நிதியை  சொன் அளித்திருக்கிறார்.   

“(என்னிலிருந்து) தொலைவில் இருந்தபோதும் அதிகரித்த கொரோனா பாதிப்பை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். கொவிட்-19 தொடர்ந்து பரவாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டி உள்ளதோடு இது அதற்காக உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்என மின் கூறியிருந்தார்.    

கொரோனா வைரஸ் தம்மை தொற்றவில்லை என்பதை உறுதி செய்வதற்கு சொன் லண்டனில் உள்ள வீட்டில் 14 நாட்கள் சுய தனிமையில் இருந்தார். தென் கொரியா திரும்பிய பின் அவர் கடந்த மாதம் கையில் ஏற்பட்ட உபாதைக்காக சத்திரசிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.  

லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரான சாடியோ மானே செனகல் தேசிய அணி வீரரும் ஆவார். தாம் ஈட்டும் பணத்தில் ஆடம்பரம் அனுபவிக்காமல் தனது வறிய நாட்டுக்கு அதிக நன்கொடைகளை வழங்கி வருகிறார்

செனகல் நாட்டில் கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கவில்லை. இதுவரை 43 பேரே நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் அது எப்போது தீவிரம் காணும் என்று யாராலும் சொல்ல முடியாது

ரொனால்டினோவை விடுவிக்க நிதியுதவி: மெஸ்ஸி மறுப்பு

பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோவை பரகுவே…

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடும் அந்நாட்டு சுகாதார நிறுவனத்திற்கு 45,000 பௌண்ட்களை அவர் நிதி உதவியாக வழங்கியிருக்கிறார். அதேபோன்று தனிப்பட்ட முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொதுமக்களை அறிவூட்டும் பணியையும் அவர் செய்து வருகிறார்

மானே தனது சொந்த ஊரான பம்பாலியில் பள்ளிவாசல், மருத்துவமனை, விளையாட்டு அரங்கை கட்டிக்கொடுத்திருக்கிறார். வறுமையில் இருந்து வந்த அவர் தனது ஏழ்மை, எளிமையை மறக்காதவராகவே இன்னும் இருக்கிறார்

அவர் லிவர்பூலில் இருக்கும் பள்ளிவாசல் ஒன்றின் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று 2018 இல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது

மெஸ்ஸி அறிவுரை 

கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது ஐரோப்பா மாறியிருக்கிறது. அங்கு இத்தாலிக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் 20 ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு உயிரிழப்பு சனிக்கிழமையாகும்போது 1,326 ஆக இருந்தது

இதனால் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த லா லிகா போட்டிகள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள். இதற்கு பார்சினோலா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் விதிவிலக்கல்ல. அவரும் ஸ்பெயினில் இருக்கும் ஆடம்பர இல்லத்தில் தனது குடும்பத்துடன் காலத்தை கழிக்கிறார்.  

தன்னை தனிமைப்படுத்திய உடற்கட்டழகர் லூசன் புஷ்பராஜ்

ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் …

கொரோனா வைரஸ் வீழ்த்தப்படும் வரை அனைவரும் தமது வீடுகளில் இருக்கும்படி இன்ஸ்டாகிராமில் அறிவுரை கூறியிருக்கிறார்

எம் அனைவருக்கும் இது சிக்கலான நாட்களாக உள்ளன. என்ன நடக்கிறது என்பது பற்றி நாம் பயப்படுகிறோம். மருத்துவமனைகளில் முன்னின்று பணியாற்றுகின்றவர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இது நேரடியாக பாதிப்பதால் நாம் வீடுகளில் இருந்து அவர்களுக்கு உதவ வேண்டும்

அவர்கள் பலத்தை பெற நாம் பிரார்த்திக்கிறோம். ஆரோக்கியம் எப்போதும் முக்கியமானதாகும். இது ஒரு அசாதாரணமாக சூழலாகும். சுகாதார துறையினர் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். இதுவே கொரோனாவுக்கு எதிராக போராடும் ஒரே வழி. இப்போது பெறுப்புடன் வீடுகளில் தங்கியிருக்கும் நேரமாகும். எமக்கு அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவுசெய்யும் எப்போதும் கிடைக்காத சிறந்த நேரமாகும். இந்த நிலைமையில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வருவோம் என்று நான் எதிர்பார்க்கிறேன்என்று மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார்.  

மறுபுறம் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது, தான் பிறந்த போர்த்துக்கல் நாட்டுக்கு சென்று தனது ஆடம்பர இல்லத்தில் காலத்தை கழிக்கிறார். ஜுவான்டஸ் வீரருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் சுய தனிமையில் ஈடுபட்டு வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்.  

ரொனால்டோ தனது ஹோட்டல்களை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மையமாக மாற்றியதாக சமூக ஊடகங்களில் பரவலாக ஒரு செய்தி பரவுகிறது. ஆனால் அது வெறுமனே ஒரு வதந்தி.

விளையாட்டு வர்ணனையாளர் அன்ட்ரியானோ டெ மொடே, வைரஸ் சிகிச்சைக்காக ரொனால்டோ தனது ஹோட்டல்களை வழங்கவேண்டும் என்று கோரியதே இப்படி வதந்தியாக மாறியிருக்கிறது

எப்படி இருந்தாலும் கொரோனா வைரஸ் எல்லாவற்றையும்போல் கால்பந்து உலகையும் முன்னர் கண்டிராத சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. பாதிப்புக்கள் ஒரு பக்கமிருக்க, இந்த கொடிய கொரோனா தொற்று முழு உலகில் இருந்தும் முழுமையாக நீங்கி உலகம் சாதாரண நிலைக்கு மீண்டும் வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<