ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்

238

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஹோமாகமவில் அமைக்கப்படவிருக்கும் இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் பற்றி சில தெளிவுபடுத்தல்களை பொது மக்களுக்கு வழங்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது. 

இலங்கையின் பெரிய கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்

ஹோமாகமவில் இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவிருக்கின்றது என ஊடகங்களில் அறிவிப்பு ஒன்று நேற்று (18) வெளியானது. இந்த அறிவிப்பை வாசகர்கள் தவறாகப் புரிந்துள்ள நிலையில் அது இலங்கை அரசாங்கத்தினதும், இலங்கை கிரிக்கெட் சபையினதும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விடயமாக மாறியிருக்கின்றது. எனவே, இந்த தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இலங்கை கிரிக்கெட் சபை சில தெளிவுபடுத்தல்களை வழங்க விருப்பம் கொண்டிருக்கின்றது. 

இந்த தெளிவுபடுத்தல்களில் முதலாவது கெத்தாராமயில் அமைந்திருக்கும் மிகப் பிரபல்யமான ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் பற்றியதாகும். ஆர். பிரேமதாச மைதானம் பற்றி குறிப்பிடும் இலங்கை கிரிக்கெட் சபை, இந்த மைதானம் கடந்த 2006ஆம் ஆண்டு சுகததாஸ விளையாட்டுத் தொகுதி அதிகாரசபையிடம் இருந்து 30 வருட கால ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட பின்னர், அதில் ஆண்டுதோறும் கணிசமான அளவு கிரிக்கெட் போட்டிகளை நடாத்தியிருப்பதாக பெருமையுடன் தெரிவித்திருக்கின்றது. இதேநேரம், இந்த மைதானம் தற்போது கிரிக்கெட் போட்டிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உயர் செயற்பாட்டு நிலையமாக (High Performance Center for Cricket) இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை கூறியுள்ளது.  

இங்கிலாந்து தொடருக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தான்

மறுமுனையில், இலங்கை கிரிக்கெட் சபை நீண்டகாலமாக கொழும்பை அண்மித்த பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 40,000 பார்வையாளர்களை உள்ளடக்குமாறு சகல வசதிகளும் கொண்ட கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிலப்பரப்பு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருந்தாகவும் தெரிவித்திருக்கின்றது. இந்த முயற்சிகளுக்கான தேவை தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகப் பிரபல்யம் அடைந்த காரணத்தினாலும், சர்வதேச கிரிக்கெட் தேவைப்பாடுகள் கருதியும் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.  

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கைக்கு செவிசாய்த்த இலங்கை அரசாங்கம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு, இலங்கை கிரிக்கெட் சபையின் சொந்த செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க ஹோமகமவில் 26 ஏக்கர் நிலப்பரப்பினை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெவ்வேறு காலநிலை நிலைமைகள் காணப்படும் நிலையில், வெவ்வேறு பருவங்களில் உள்ள காலநிலைகளுக்கு ஏற்ப கிரிக்கெட் போட்டிகளை விளையாட இலங்கை கிரிக்கெட் சபை நாடெங்கிலும் சர்வதேச தரத்துடன் கிரிக்கெட் மைதானங்களை அமைக்க முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருக்கின்றது.  

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் செயற்திட்டத்திற்காக முதலீடு செய்யவுள்ள பணத்தினை 15 வருடகாலத்திற்குள் மீளச் செலுத்தும் வகையில், ஆய்வு ஒன்றினைச் செய்து ஆலோசனைகளை குறிப்பிடுமாறு இலங்கையின் பிரபல்ய கணக்காய்வு நிறுவனங்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தாகவும்  தெரிவித்திருக்கின்றது. 

கிரிக்கெட்டின் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள் மிகவும் பிரபல்யம் அடைந்திருப்பதன் காரணத்தினால், அதற்காக அதிக பார்வையாளர்களை எடுக்க வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதன்படி, அதிக பார்வையாளர்களை நகரப்பகுதிகளில் இருந்து இலகுவாக எடுக்க முடியும்.  இதேநேரம், ஐ.சி.சி. ஆனது உலகக் கிண்ணம் போன்ற கிரிக்கெட் தொடர்களை நடாத்த விருப்பம் தெரிவிக்கும் தமது அங்கத்துவ நாடுகளுக்கு குறைந்தது ஐந்து சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் (25,000-40,000 பார்வையாளர்களை உள்ளடக்கூடிய) இருக்கும் போது முக்கியத்துவம் தருகின்றதாக கூறப்படுகின்றது.   

கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் போது, அது நாட்டில் வெளிநாட்டு பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளதாரத்திற்கு மிக அவசியமானது. இன்னும், இலங்கை கிரிக்கெட் சபை 2023 தொடக்கம் 2031 வரையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. இன் உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டினை இலங்கையில் நடாத்துவதற்கு ஐ.சி.சி. இடம் தமது விருப்பத்தினை தெரிவித்திருக்கின்றது. 

“கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்” – பொன்டிங்

எல்லா விடயங்களினையும் கருதி, அதில் பல்வேறு கோணங்களில் தீர்க்கமான ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு, இந்த ஹோமாகம கிரிக்கெட் மைதான செயற்திட்டத்திற்காக எவ்வாறு முதலீடு செய்வது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவிருக்கின்றது.    

அதேநேரம், ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள மைதானம் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் ஏனைய செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. 

இலங்கை வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்? – மிக்கி ஆத்தர்

இறுதியாக இலங்கை கிரிக்கெட் சபை, இந்த செயற்திட்டத்திற்காக பயன்படுத்தவுள்ள நிதி, முழுமையாக இலங்கை கிரிக்கெட் சபை என்னும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிதி என்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு இந்த செயற்திட்டத்திற்காக அரசாங்கத்திடம் இருந்து எந்த நிதி உதவிகளும் பெறப்படவில்லை, பெறப்படவும் மாட்டாது என்பதையும் உறுதி செய்திருக்கின்றது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<