ஜுவன்டஸ் பயிற்சியாளர் மவுரிசியோ சாரி அதிரடி நீக்கம்

227

லியோன் அணிக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து ஜுவன்டஸ் கழகம் வெளியேறியதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளராக கடமையாற்றிய மவுரிசியோ சாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இத்தாலி சீரி A கழகமான ஜுவன்டஸ் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற பிரான்ஸ் கழகமான லியோனுக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டாவது கட்டப் போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. எனினும் இரண்டு கட்டப் போட்டிகளிலும் இரு அணிகளும் 2-2 என்ற மொத்த கோல்கள் கணக்கில் சமநிலை பெற்றபோதும் வெளி மைதானத்தில் கோல் பெறத் தவறியதால் ஜுவன்டஸ் தொடரில் இருந்து வெளியேறியது.  

>>கால்பந்தில் நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை – உசைன் போல்ட்<<

இந்நிலையில் ஜுவன்டஸ் கழகம் இன்று (08) வெளியிட்ட அறிவிப்பில், முதல் அணிக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து மவுரிசியோ சாரி விடுவிக்கப்படுவதாக ஜுவன்டஸ் கழகம் அறிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இத்தாலி கால்பந்தின் அனைத்து பிரிவுகளையும் முன்னேற்றுவதற்கான ஒரு தனிப்பட்ட பயணத்தின் உச்சமாக தொடர்ச்சியாக ஒன்பதாவது சம்பியன்ஷிப் வெற்றியுடன் ஜுவன்டஸில் ஒரு புதிய பக்கத்தை எழுதியதற்காக பயிற்சியாளருக்கு கழகம் நன்றி கூற விரும்புகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் சீரி A சம்பியன் பட்டத்தை வென்றபோதும் மவுரிசியோ சாரி, தாம் பயிற்சியாளராக பணியாற்றிய முதல் பருவத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு தவறியதாக பரவலாகக் கூறப்படுகிறது. இதில் கடந்த பருவத்தின் சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் ஜுவன்டஸ் கழகம் தோற்றது, 61 வயதான மவுரிசியோ சாரி மீதான அவநம்பிக்கையை அதிகரித்தது. 

>>இனி வேண்டுமென்று இருமினாலும் சிவப்பு அட்டை<<

இதன்படி ஜுவன்டஸ் கழகத்திதுக்காக பயிற்சியாளராக கடமையாற்றிய மவுரிசியோ சாரி 51 போட்டிகளில் 34 வெற்றிகள், எட்டு சமநிலை மற்றும் ஒன்பது தோல்விகளுடன் அந்தக் கழகத்தில் இருந்து வெளியேறுகிறார். இம்முறை ஜுவன்டன் கழகம் சீரி A தொடரில் மொத்தம் 83 புள்ளிகளை பெற்றது அந்த அணி தொடர்ச்சியாக சம்பியன் பட்டம் வென்ற ஒன்பது பருவங்களில் மிகக் குறைவான புள்ளியாக இது அமைந்தது. இந்தக் காலப்பிரிவில் ஜுவன்டஸ் இத்தாலியின் சுப்பர் கப்பில் லாசியோவிடம் தோற்றதோடு கோப்பா இத்தாலி இறுதிப் போட்டியில் நாபோலியிடம் தோற்றது.  

(சம்பியன்ஸ் லீக்கில்) தகுதி பெறாதது எனக்கு பெரும் ஏமாற்றத்தை தறாதபோதும், அணியின் ஆட்டம் பற்றி நான் திருப்தி அடைகிறேன் என்று லியோனிடம் தோற்ற பின் மவுரிசியோ சாரி தெரிவித்திருத்தார்.  

உண்மையில் நான் இதனை விடவும் குறைவாகத் தான் எதிர்பார்த்தேன். ஆனால் நாம் சிறப்பாக ஆடினோம். பெனால்டி உதையினால் நாம் பின்தள்ளப்பட்டு தோல்வியுறவும் வாய்ப்பு இருந்தது. நாம் 2-1 என முன்னிலையில் இருந்தபோது எமக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.   

>>Video – இலங்கையில் புதிய தொடர் ; புதிய அனுசரணையாளர் ! | FOOTBALL ULLAGAM<<

எனினும் இந்த முடிவினால் கடைசியாக 1996 ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன் லீக்கை வென்ற ஜுவன்டஸ் அணிக்கு அதனை மீண்டும் வெல்லும் வாய்ப்பு பறிபோனது. 

ஐரோப்பிய லீக்கில் செல்சி வெற்றி பெற்றதை அடுத்து அதன் பயிற்சியாளராக இருந்த மவுரிசியோ சாரி கடந்த பருவத்தில் மசிமிலியானோ அலெக்ரியிற்கு பதில் ஜுவன்டஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

அவர் மூன்று ஆண்டு ஒப்பந்தமாகவே ஜுவன்டஸில் பயிற்சியாளராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<