சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் T20 உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றின் போட்டி அமைப்புக்களில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஐ.சி.சி இன் ஆண்டு நிர்வாகக் கூட்டத்தில், இந்த போட்டி அமைப்பின் புதிய மாற்றங்களுக்கும் 2028ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண மாற்றங்களுக்குமான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
>>500 ட்ரோன்கள், இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 LPL<<
ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணம் (ஒருநாள் உலகக் கிண்ணம்)
புதிய விதிமுறைகளில் 14 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. இன் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் அணிகள் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்றாலும், லீக் சுற்றுகளின் சுவாரசியத்தை அதிகரிக்கவும், தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு போட்டிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய முத்தரப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய வடிவம்
7 அணிகள் கொண்ட இரு குழுக்கள் (42 போட்டிகள்) ஒவ்வொரு குழுவில் இருந்து முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ”சுப்பர் சிக்ஸ்” சுற்றுக்கு முன்னேறும். அதன் பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும்.
புதிய வடிவம்
சுற்று 1 (சுப்பர் சீரிஸ் சுற்று): தரவரிசையில் இறுதி இடங்களில் உள்ள 3 அணிகள் (12, 13 மற்றும் 14ஆவது இடங்கள்) தங்களுக்குள் விளையாடும். இதில் முதலிடம் பெறும் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும்.
சுற்று 2: தலா ஆறு அணிகள் கொண்ட இரு குழுக்கள் (30 போட்டிகள்) இதில் காணப்படும். ஒவ்வொரு குழுவிலும் உள்ள முதல் 3 அணிகளும், இதற்கு அடுத்தபடியாக அதிக புள்ளிகளைப் பெற்ற ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.
சுற்று 3 (சுப்பர் 7 சுற்று): தகுதி பெற்ற 7 அணிகளும் Round Robin அடிப்படையில் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும் (21 போட்டிகள்). இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
சுற்று 4 (நொக்அவுட்): புள்ளிகள் அட்டவணையில் முதல் இடம் பெற்ற அணியும், நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரையிறுதிப் போட்டியிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற அணிகள் அடுத்த அரையிறுதிப் போட்டியிலும் ஆடி இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவாகும். (3 போட்டிகள்)
ஆடவர் T20 உலகக் கிண்ணம்
கிரிக்கெட் விளையாட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் 2028ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது சுற்றான சுப்பர் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் எண்ணிக்கை 8 இல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பை கூட்ட எலிமினேட்டர் சுற்றும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது.
பழைய வடிவம்
தலா 5 அணிகள் கொண்ட 4 குழுக்கள் (40 போட்டிகள்) ஒவ்வொரு குழுவுக்கும் 2 அணிகள் வீதம் 8 அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
புதிய வடிவம்
குழு சுற்று: தலா 4 அணிகள் கொண்ட 5 குழுக்கள் (30 போட்டிகள்). ஒவ்வொரு குழுக்களில் இருந்தும் முதல் 2 அணிகள் வீதம் மொத்தம் 10 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
சுப்பர் 10: தலா 5 அணிகள் கொண்ட இரு குழுக்கள் (20 போட்டிகள்).
நேரடி தகுதி மற்றும் எலிமினேட்டர்கள்: இரண்டு குழுக்களிலும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும். ஆனால், ஒவ்வொரு குழுவிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டிகளில் மோத வேண்டும். இதில் வெல்லும் இரு அணிகள் அரையிறுதிக்கு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















