பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) இரவு நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி மகளிர் ஆசியக் கிண்ண 2026 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நடப்பு சம்பியனான இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 131ஃ6 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
மத்திய வரிசை விராங்கனைகள் ஹர்ஷிதா சமரவிக்ரம., கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுதியங்கனா ஆகியோரின் அபார துடுப்பாட்ட ஆற்றல்கள் இலங்கையை வெற்றி பெறச் செய்தது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. முதல் 10 ஓவர்களுக்குள் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது. இருப்பினும், அணித்தலைவி பாத்திமா சனா பொறுப்புடன் விளையாடி 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்கள் குவித்து அணியை மீட்டார்.
நெருக்கடியான நேரத்தில் பொறுப்புடன் விளையாடிய பாத்திமா, நடுப்பகுதி ஓவர்களில் ஓட்ட விகிதத்தைச் சீராகப் பராமரித்து, இறுதி ஓவர்களில் வேகப்படுத்தினார்.
முன்னதாக, ஷாவால் சுல்ஃபிகார் 16 பந்துகளில் 24 ஓட்டங்களும், குல் பெரோசா 32 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுத்து சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்தனர். இறுதிக்கட்டத்தில் தூபா ஹசன் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்கள் சேர்க்க, பாக்கிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.
- சேத்தனா, மிதாலி, சமரியின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி
- சமரியின் சாதனை பந்துவீச்சினால் இலங்கைக்கு மகளிருக்கு 2ஆவது வெற்றி
- ஹர்ஷிதாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்குத் ஆரம்பம் சாதகமாக அமையவில்லை. 6.2 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியதால், பாகிஸ்தான் வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் கவிஷா டில்ஹாரி ஆகியோரின் கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 5ஆவது விக்கெட்க்கு இணைந்த இந்த ஜோடி 67 ஓட்டங்கள் சேர்த்து இலங்கையை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது.
ஹர்ஷிதா 31 பந்துகளில் 36 ஓட்டங்களும், டில்ஹாரி 33 பந்துகளில் 33 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தக் கூட்டணி இலங்கையை வெற்றி இலக்கிற்கு அருகில் கொண்டு சென்று பாகிஸ்தானுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணித்தலைவி பாத்திமா சனா ஒரே ஓவரில் ஹர்ஷிதா மற்றும் டில்;ஹாரி ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தினார். அப்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்ததுடன், வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
கடைசி நேர அழுத்தத்தையும் மீறி நிலக்ஷிகா சில்வா மற்றும் கௌஷானி நுத்யங்கனா ஜோடி நிதானத்தைக் கடைப்பிடித்தது. இதில் நிலக்ஷிகா சில்வா 13 ஓட்டங்களுடனும், நுத்யங்கனா 14ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, இலங்கை அணி 8 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டியது.
இதன் மூலம் இலங்கை அணி மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக தகுதி பெற்றது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை இலங்கை எதிர்கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையானது இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது 8ஆவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ள நிலையில், இலங்கை அணி 2024 இல் வென்ற சம்பியன் பட்டத்தைத் தற்காத்துக் கொள்ளப் போராடும். இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















