துபாயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (02) நடைபெற்ற இந்தோனேசிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நடப்புச் சம்பியனான இலங்கை மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
சமரி அத்தபத்துவின் 7 விக்கெட் குவியல் மற்றும் நிலக்ஷிகா சில்வாவின் அதிரடி அரைச் சதம் ஆகியன இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தோனேசிய அணி, போட்டியின் முதல் மணிநேரத்தில் இலங்கைக்கு கடும் சவாலாக விளங்கியது. குறிப்பாக, அனுபவமற்ற இந்தோனேசிய பந்துவீச்சுக்கு எதிராக இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து தடுமாறினர். எனினும், 6வது வீரராகக் களமிறங்கிய நிலக்ஷிகா சில்வா, சரிவிலிருந்து அணியை மீட்டு 20 ஓவர்களில் 124ஃ7 என்ற கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினார்.
நிலக்ஷிகா சில்வா 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 50 ஓட்டங்களைக் குவித்து அணியின் அதிகபட்ச ஓட்டங்களை எட்டினார். இந்தோனேசிய சார்பில் நி லூ தேவால் சிறப்பாகப் பந்துவீசி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து பதிலளித்தாடிய இந்தோனேசிய அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 49 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
- ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் மீண்டும் காவ்யா காவிந்தி
- சேத்தனா, மிதாலி, சமரியின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி
துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தபத்து, பந்துவீச்சில் அசத்தலான திறமையை வெளிப்படுத்தினார். அவர் 3.3 ஓவர்களில் வெறும் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இது இலங்கை மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கையாகும். அத்துடன், ஐ.சி.சி முழு உறுப்பினர் நாடு ஒன்றின் சார்பில் மகளிர் T20I போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது.
அது மாத்திரமின்றி, தனது பந்துவீச்சின் இறுதி மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனையும் சமரி படைத்தார். இதன் மூலம் மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இலங்கை வீராங்கனை என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்தார்.
எனவே, பந்துவீச்சில் சாதனை படைத்த சமரி அத்தபத்துவிற்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை மகளிர் அணி, குழு B இல் 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. இந்த நிலையில், இலங்கை மகளிர் அணி தனது கடைசி லீக் போட்டியில் எதிர்வரும் 6ஆம் திகதி பங்களாதேஷ் அணியை சந்திக்கவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் அணி: 124/7 (20 ஓவர்கள்) – நிலக்ஷிகா சில்வா 50, நி லூ தேவி 3/32
இந்தோனேசிய மகளிர் அணி: 49 (18.3 ஓவர்கள்) – சாம்பரி அத்தபத்து 7/5
முடிவு: இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















