களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு களப் பயிற்சி அளித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

Sri Lanka Cricket CSR Programmes

2
Sri Lanka Cricket CSR Programmes 

விளையாட்டு ஊடகவியல் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வொன்றின் ஊடக செயல்பாடுகள் குறித்து நடைமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன தொடர்பியல் துறையைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கல்விச் சுற்றுலா ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இவ்விஜயத்தின் ஒரு பகுதியாக, விரிவுரையாளர்களுடன் வருகை தந்த மாணவர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கிரிக்கெட் செய்தி அறிக்கை தயாரித்தல், விளையாட்டுப் புகைப்படக் கலை மற்றும் சர்வதேச ஊடக செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகிய துறைகளில் கள ஆய்வை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 2ஆவது நான்கு நாள் போட்டியின் போது இக்கள ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஊடகப் பிரிவின் (Press Box) செயல்பாடுகள், நேரலை விளையாட்டுச் செய்திச் சேகரிப்பு மற்றும் புகைப்படக் கலை ஆகியவற்றில் மாணவர்கள் நேரடி அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடகப் பிரிவினால் ‘விளையாட்டு ஊடகவியலில் தொழில்முறை நடைமுறைகள்’ என்ற தலைப்பில் சிறப்பு விளக்கவுரையும், அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வும் நடத்தப்பட்டது.

>>இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி; ஒருநாள் மற்றும் T20 குழாம்கள் வெளியீடு<<

அதேபோல, மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஊடகப்படுத்தும் துறையில் அனுபவம் வாய்ந்த புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடவும், விளையாட்டு ஊடகத் துறையில் பணியாற்றுவதன் நடைமுறை அம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து அறிந்து கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

வகுப்பறை கற்றலை நிஜ உலக ஊடக நடைமுறைகளுடன் இணைக்கவும், விளையாட்டு ஊடகவியலில் உள்ள தொழில்முறை தரநிலைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொள்ளவும் இந்த விஜயம் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

மாணவர்களுடன் வருகை தந்த விரிவுரையாளர்களில் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சமன் ராஜபக்ஷ, செல்வி அமலி நந்தசிரி, திருமதி திலினி கமகே, தற்காலிக விரிவுரையாளர் திருமதி அமானி ரூபசிங்க மற்றும் உதவி விரிவுரையாளர்களான செல்வி நிபுணி பாக்யா, திரு. சவிந்து இரோஷன் ஆகியோர் அடங்குவர்.

அடுத்த தலைமுறை தொழில்வல்லுநர்களை வலுப்படுத்துவதையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு அங்கமாகவே இச்செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<