விஷ்மி – ஹர்ஷிதாவின் அபார சதங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

Pakistan Women’s Tour of Sri Lanka 2026

2
vishmi & harshitha

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் இன்று (25) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் அபார சதங்களின் உதவியால் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீனின் ஆட்டமிழக்காத சதம் வீணான நிலையில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டுக்காகப் பெற்றுக்கொண்ட 203 ஓட்டங்கள் வரலாற்றுச் சாதனை இணைப்பாட்டம் இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 1–1 எனச் சமன் செய்துள்ளது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், சித்ரா அமீன், அணியின் இன்னிங்ஸை வேகமாகக் கட்டமைத்தார். முக்கிய இணைப்பாட்டங்களை ஏற்படுத்திய அவர், கடைசி ஓவரில் சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆயிஷா ஜாஃபர் (49), முனீபா அலி (45) ஆகியோரின் முக்கிய பங்களிப்புடனும், அணித்தலைவி பாத்திமா சனா ஆட்டமிழக்காமல் அதிரடியாகப் பெற்று;க்கொண்ட 25 ஓட்டங்கனுடனும் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து, சேத்தனா விமுக்தி, இனோகா ரணவீர மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து 274 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிய இலங்கை மகளிர் அணிக்கு, ஐந்தாவது ஓவரிலேயே தலைவர் சமரி அத்தபத்துவை வீழ்த்தி பாத்திமா சனா அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும், அதன்பின் ஜோடி சேர்ந்த விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். 35 ஓவர்களுக்கும் மேலாக இணைந்து ஆடிய இந்த ஜோடியில், விஷ்மி குணரத்ன 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 123 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 40ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இது அவரது இரண்டாவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.

இச்சதத்தின் மூலம் இலங்கை சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சமரி அத்தபத்துவிற்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த இரண்டாவது இலங்கை மகளிர் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதன்பின், கவிஷா தில்ஹாரி (40*) களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹர்ஷிதா நிதானமாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனது 2ஆவது சதத்தை அடித்தார். இவர்களது ஆட்டத்தால் பாகிஸ்தானின் மீண்டு வரும் நம்பிக்கைத் தகர்ந்தது. இந்த ஜோடி 45 பந்துகளில் 52 ஓட்டங்கள் சேர்க்க, இலங்கை அணி 47ஆவது ஓவரிலேயே இலக்கை இலகுவாக அடைந்தது.

இப்போட்டியில் ஹர்ஷிதா – விஷ்மி ஜோடி சேர்த்த 203 ஓட்டங்கள், மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்காகவும் இலங்கை மகளிர் அணி பதிவு செய்த அதிகபட்ச இணைப்பாட்டமாகும் இதற்கு முன்னர் நிலக்ஷிகா சில்வா – சமரி அத்தபத்து ஜோடி சேர்த்த 190 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.

அத்துடன், மகளிர் ஒருநாள் போட்டிகளில் 2ஆவது விக்கெட்டுக்காக இலங்கை அணி பதிவு செய்த அதிகபட்ச இணைப்பாட்டமும் இதுவேயாகும். இதற்கு முன்னர் ரசங்கிகா – யசோதா மெண்டிஸ் ஜோடி குவித்த 117 ஓட்டங்கள் சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 28ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<