இலங்கை கிரிக்கெட்டினால் 900 பாடசாலைகளுக்கு இலவச கிரிக்கெட் பந்துகள்

1
Cricket

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டிற்கான 13 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் சுமார் 900 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் பந்துகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன் ஆரம்ப விழா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது, இப்போட்டித் தொடரின் முதல் பிரிவில் (Division I) பங்குபற்றும் 81 பாடசாலைகளுக்கும், இரண்டாம் பிரிவில் (Division II) பங்குபற்றும் 84 பாடசாலைகளுக்கும் கிரிக்கெட் பந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 13 வயதிற்குட்பட்ட முதல் மற்றும் இரண்டாம் பிரிவுப் போட்டிகளில் பங்குபற்றும் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், பாடசாலைப் பிரதிநிதிகள், பயிற்றுநர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்வின் போது 2026 ஆம் ஆண்டிற்கான 13 வயதிற்குட்பட்ட பாடசாலைக் கிரிக்கெட் தொடருக்கான புதிய விதிகள், நடைமுறைகள் மற்றும் போட்டி நிபந்தனைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

>>களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு களப் பயிற்சி அளித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம்<<

இப்போட்டித் தொடருக்காக நாடு முழுவதிலும் இருந்து பங்குபற்றும் பாடசாலைகளுக்கு போட்டி நிபந்தனைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதோடு, பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதில் சீரான தன்மையை உறுதி செய்வதையும் இந்த வழிகாட்டல் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இதன்படி, எதிர்வரும் 13 வயதிற்குட்பட்ட பாடசாலைக் கிரிக்கெட் தொடரில் பிரிவு 1, பிரிவு 2 மற்றும் பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் பங்குபற்றுவதற்காகச் சுமார் 900 பாடசாலைகள் பதிவுசெய்துள்ளன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பங்குபற்றும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான கிரிக்கெட் பந்துகள் வழங்கப்படுவதுடன், போட்டியை நிர்வகிக்கும் புதிய விதிகள், சட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் பற்றியும் தெளிவுபடுத்தப்படும்.

இதேவேளை, 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முதல் பிரிவு (Division I) போட்டித் தொடரில் பங்குபற்றும் 13 பெண் பாடசாலைகளுக்கு தலா 2,50,000 ரூபா வீதம் பயண மானியத்தை இலங்கை. கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது. பாடசாலைப் பெண்களின் கிரிக்கெட்டை மேலும் ஊக்குவிக்கவும் வளர்க்கவும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கிரிக்கெட் குழுவின் தலைவர் சிதத் வெத்தமுனி, கல்வி அமைச்சின் கல்விப் பிரதிப் பணிப்பாளர் பிரபாத் இந்திக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய கிரிக்கெட் செயல்பாடுகளின் தலைவர் சிந்தக்க எதிரிமான்ன, இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சுசந்த மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் (High Performance Centre) சிரேஷ்ட முகாமையாளர் ருவன் கல்பகே, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் கல்விப் பிரிவின் தலைவர் ஹெஷான் டி மெல் மற்றும் இலங்கை கிரிக்கெட், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<