ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று காலிங்க குமாரகே சாதனை! 

Asian Athletics Championships 2025

23
KALINGA KUMARAGE

தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது நாளான இன்று (28) இலங்கை 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற காலிங்க குமாரகே, 45.55 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 2007ஆம் ஆண்டு பிரசன்ன சம்பத் அமரசேகர ஜோர்தானின் அம்மானில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, குறித்த போட்டி நிகழ்ச்சியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அதுமாத்திரமின்றி, ஆசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியொன்றில் காலிங்க குமாரகே வென்ற முதல் பதக்கமாக இது பதிவாகியது. அதேபோல, இம்முறை ஆசிய மெய்வலலுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கமாகவும் இது இடம்பிடித்தது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியை 46.59 செக்கன்களில் நிறைவு செய்த காலிங்க, அரையிறுதியில் 45.74 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். எவ்வாறாயினும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இரண்டிலும் அவர் பதிவு செய்த நேரப் பெறுமதி 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவரது அதிசிறந்த நேரப் பெறுதி பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, குறித்த போட்டியை 45.33 செக்கன்களில் நிறைவுசெய்த கத்தார் வீரர் அம்மார் இஸ்மாயில் வை இப்ராஹிம் தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வீரர் கென்டாரோ சாட்டோ (45.50 செக்.) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

இதேவேளை, நேற்று (27) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் நான்காவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய அருண தர்ஷன, அப் போட்டியை 48.10 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆம் இடத்தைப் பெற்று தகுதிகாண் சுற்றுடன் வெளியேறிமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இன்று பதிவான மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாங்கொக்கில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கையின் நட்சத்திர வீராங்கனை நடீஷா ராமநாயக்கவின் தோல்வி அமைந்தது.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 54.70 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 8ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை மட்சுமோட்டோ (52.17 செக்.) தங்கப் பதக்கத்தையும், இந்திய வீராங்கனை ருபால் சௌதரி (52.68 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஹுக்மோவா (52.79 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இது இவ்வாறிருக்க, கலப்பினத்தவர்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இப் போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 21.95 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.

வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் சதேவ் ராஜகருண, சயுரி லக்ஷிமா மெண்டிஸ், காலிங்க குமாரகே மற்றும் நிஷேந்த்ரா ஹர்ஷனி பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்தப் ஓட்டப் போட்டியில் இந்தியா (3:18.12) தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, சீனா (3:20.52) வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியது.

எனினும், இப் போட்டியில் விதி மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கையிடமிருந்து குறித்த பதக்கம் பறிக்கப்பட்டு தென் கொரியாவுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், போட்டி விதி மீறல் குற்றச்சாட்டுகள் கிடைத்ததன் பிறகு, இலங்கை மற்றும் சீனாவும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தன. அதன்படி, நிகழ்வின் திருத்தப்பட்ட இறுதி முடிவின்படி சீனாவிற்கு வெள்ளிப் பதக்கமும், இலங்கைக்கு வெண்கலப் பதக்கமும் மீண்டும் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாங்கொக்கில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலப்பினத்தவர்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையின் மற்றுமொரு பதக்க நம்பிக்கையாக இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் அரை இறுதிப் போட்டியில் பங்குகொண்ட சமோட் யோதசிங்க, 10.46 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3ஆவது இடத்தைப் பெற்றார். எவ்வாறாயினும், மூன்று தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் அவர் 10ஆவது இடத்தை பெற்றுக்கொண்டதால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனது.

எவ்வாறாயினும், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியை 10.20 செக்கன்களில் ஓடி முடித்து ஜப்பானின் ஹிரோகி யானகிதா, ஆசியாவின் அதிவேகமான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல, சீனாவின் லியாங் யாவோஜிங் பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியை 11.37 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஆசியாவின் அதிவேகமான வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இதேவேளை, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 3ஆவது நாளான நாளைய தினம் (29) இலங்கை வீரர்கள் பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் பல முக்கிய போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். இதில் பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டி மெத்மி ரசாரா விஜேசூரிய பங்குபற்றவுள்ளார். அத்துடன், ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் தகுதிகாண் சுற்று மற்றும் பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்ட நேரடி இறுதிப் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுளளது.

இது இவ்வாறிருக்க ஆண்களுக்கான உயரம் பாய்தல் இறுதிப் போட்டியில் லெசந்து அர்த்தவிது பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<