சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது புனித ஹென்றிக்கல்லூரி

771

19 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கொத்மலை சொக்ஸ்  கால்பந்து போட்டித் தொடரின் இறுதிபோட்டி நேற்று (19) கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும்  இளவாலை புனித ஹென்றிக் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினாலும் கொழும்பு சாஹிரா கல்லூரி அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. ஓரிரண்டு கோல்களை போடும் வாய்ப்பை நழுவ விட்டது சாஹிராகல்லூரி. இவ்வாறு விறு விறுப்பாக போட்டி சென்று கொண்டிருந்த போது போட்டியின் 1வது பாதி முடிய 3 நிமிடங்கள் இருக்கும் போது 42வது நிமிடத்தில் புனித ஹென்றிக் கல்லூரி அணியின் பெனடிக் செவியர் கனிஸ்டன்   என்பவரால் 1வது கோல் போடப்பட்டது. அதன் பின் 1வது  பாதியின் மேலதிக நேரம் (Injury Time) இன் போது சாஹிரா கல்லூரி அணியின் ஹம்மாத் என்பவரால் சாஹிரா அணிக்கு 1வது கோல் போடப்பட்டது. இதன் பின் 1வது பாதியின் முடிவில் போட்டி 1-1 என்று சமநிலையில் காணப்பட்டது.

இரண்டாவது பாதி ஆரம்பிக்கப்ட்டது. சாஹிர கல்லூரியின் ஆதிக்கம் முதலாவது பாதியை விட குறைவாகவே காணப்பட்டது. இதை வாய்ப்பாக பயன்படுத்திய  புனித ஹென்றிக் கல்லூரி அணி வீரர்கள் 2வது பாதியில் மிக சிறப்பாக விளையாடினர். போட்டியின் 62வது நிமிடத்தில் புனித ஹென்றிக் கல்லூரியின் ஞானேஸ்வரன்  அந்தோனிராஜ்  தனது அணிக்காக 2வது கோலை போட போட்டி புனித ஹென்றிக் கல்லூரி அணிப்பக்கம் திரும்பியது. அதையடுத்து 67வது நிமிடத்தில் புனித ஹென்றிக் கல்லூரியின் மற்றுமொரு வீரரான பெனடிக் அனோஜன் என்பவரால் புனித ஹென்றிக் கல்லூரி சார்பாக 3வது கோல் போடப்பட்டது. 2 கோல்கள் முன்னிலைப் பெற்று புனித ஹென்றிக் கல்லூரி அணி போட்டியில் Zahiதமது முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியது. பின் போட்டியின் முடிவில் 3-1 என்ற அடிப்படையில் நடப்பு சாம்பியன் சாஹிராகல்லூரியை தோற்கடித்து 2015ம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான  கொத்மலை சொக்ஸ்  கால்பந்து போட்டித் தொடரின் சம்பியன் பட்டதை தன் வசப்படுத்தியது.

 Replay – Zahira v St.Henry’s – U19 Football Championship (Final) 

இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக புனித ஹென்றிக் கல்லூரியின் பெனடிக் அனோஜனும் சிறந்த கோல் காப்பாளராக அதே  புனித ஹென்றிக் கல்லூரியின் கோல் காப்பாளர் உகன்திஸ்வரன் அமல்ராஜும் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது முக்கிய அம்சமாகும்.

அதே வேளை  3ம் இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் களுத்துறை ஹொலி க்ரொஸ் கல்லூரி அணி கட்டுநேரிய புனித செபஸ்டியன் கல்லூரியை 1க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு  கொத்மலை சொக்ஸ்  கால்பந்து போட்டித் தொடரில் 3வது இடத்தை பெற்று கொண்டது.