பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளராக தென்ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியை உலகில் “நம்பர் 1” அணியாக மாற்றுவதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் வக்கார் யூனிஸ். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் வக்கார் யூனிஸ் அதிரடியாக மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக தென்ஆபிரிக்காவின் மிக்கி ஆர்தர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், இதுவரை தனது பதவியை ஏற்காமல் இருந்த அவர், நேற்று தென்ஆபிரிக்காவில் இருந்து பாகிஸ்தானின் லாஹுர் நகரை வந்தடைந்தார். அதன்பின் தனது பதவியை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் அவர் கூறுகையில் ‘‘எனது குறுகிய காலத் திட்டம் பாகிஸ்தான் அணியில் கிரிக்கட் கலாச்சாரத்தை ஏற்படுத்துவது. அதன்பின் நீண்ட காலத் திட்டம் அணியை மூன்று வகை கிரிக்கட்டிலும் நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி மிகச்சிறந்த நிலையில் உள்ளது. துணைக்கண்டத்திற்கு வெளியே நன்றாக விளையாட முடியும் என்றால், அந்த அணி நல்ல முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது அர்த்தம்.
முஹமத் ஆமிர் தலைசிறந்த வீரர். அவரை சிறந்த வீரராக உருவாக்க நான் ஆர்வம் காட்டுகிறேன். மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது எனக்குக் கவலையில்லை” என்றார்.
பாகிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், ஒருநாள் தரவரிசையில் 9ஆவது இடத்திலும், டி20 தரவரிசையில் 7ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கிய அம்சமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்