109 ஆண்டுகால ஒலிம்பிக்கில் புது வரலாறு படைத்த இத்தாலி அணி

Tokyo Olympics - 2020

194
Getty Image/ Reuters

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து போட்டிகளும் நிறைவுக்கு வரவுள்ளன.

இதனிடையே, ஒலிம்பிக் மெய்வல்லுனரின் எட்டாவது நாளான இன்றைய தினம் ஒலிம்பிக் சாதனைகளுடன் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் அரங்கேறின.

Video – இலங்கையின் நாமத்தை ஒலிம்பிக்கில் மிளிரச் செய்த நம்மவர்கள்..!| 2020 Tokyo Olympics

இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான 4x100 அஞ்சலோட்டப் போட்டிகள் இன்று இரவு நடைபெற்றதுடன், இதில் பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் ஜமைக்கா அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும், இத்தாலி அணி வரலாற்றில் முதல்தடவையாகவும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது

இந்தப் பதக்கத்துடன் இத்தாலி அணி இம்முறை ஒலிம்பிக் மெய்வல்லுனரில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தது. 

இதனிடையே, இன்று நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சீனா வீராங்கனை லுய் ஷியாங் தங்கம் வென்று சீனாவுக்கான இரண்டாவது மெய்வல்லுனர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். முன்னதாக பெண்களுக்கான குண்டு போடுதலில் சீனா தங்கம் வென்றது

இதேவேளை, பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கென்யா வீராங்கனை பைத் கிபியெகோன் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக அவர் வென்ற இரண்டாவது தங்கம் இதுவாகும்.

மறுபறத்தில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் நடப்பு உலக சம்பியனான உகண்டா நாட்டு வீரர் ஜோஸுவா செப்டெகெய் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக்கில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை உகண்டா வெற்றிகொண்டது

எனவே, டோக்கியோ ஒலிம்பிக்கின் 14ஆவது நாளில் இடம்பெற்ற முக்கிய போட்டிகள் நிகழ்ச்சிகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.  

ஆண்களுக்கான 4x100 இல் இத்தாலி சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 4x100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் அமெரிக்கா, ஜமைக்கா அணிகளை பின்தள்ளி முதல் முறையாக இத்தாலி அணி தங்கப் பதக்கம் வென்றது

குறித்த போட்டியை 37.50 செக்கன்களில் நிறைவுசெய்து இத்தாலி அணியால் தேசிய சாதனையும் முறியடிக்கப்பட்டது.

அதுமாத்திரமின்றி, 109 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஆண்களுக்கான 4x100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இத்தாலி அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

இந்த வெற்றியுடன் இத்தாலி அணி, இம்முறை ஒலிம்பிக் மெய்வல்லுனரில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தது.

இதனிடையே, குறித்த போட்டியில் பிரித்தானியா அணி வெள்ளிப் பதக்கத்தையும், கனடா அணி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தது.

உலகின் அதிவேக வீரராக மகுடம் சூடிய இத்தாலியின் நீளம் பாயதல் வீரர்

ஜமைக்கா மங்ககைகளுக்கு தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான 4x100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் ஜமைக்கா அணி தங்கப் பதக்கம் வென்றது.

போட்டியை 41.02 செக்கன்களில் நிறைவுசெய்த அந்த அணி, ஒலிம்பிக் வரலாற்றில் 3ஆவது அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவிகரித்தது.

குறித்த போட்டியில் அமெரிக்கா அணி வெள்ளிப் பதக்கத்தையும், பிரித்தானியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

வேகநடையில் சாதித்த போலந்து வீரர்

20 கிலோ மீட்டர் வேகநடைப் போட்டியில் தங்கம் வெல்வதையே குறிக்கோளாக கொண்டிருந்த போலந்து வீரர் டாவிட் டொமாலா, 50 கிலோ மீட்டர் வேகநடையில் பங்கேற்ற 2ஆவது போட்டியிலேயே தங்கப் பத்ககம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று அதிகாலை ஆண்களுக்கான 50 கிலோ மீட்ட வேகநடைப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் போலந்து வீரர் டாவிட் டொமாலா போட்டித் தூரத்தை 3 மணித்தியாலயம் 50.08 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்

ஜேர்மனி வீரர் ஜொனாதன் ஹில்பர்ட் வெள்ளிப் பதக்கத்தையும், கனடா வீரர் எவான் டுன்பி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதில் தங்கப் பதக்கம் வென்ற போலந்து வீரர், அவரது வாழ்நாளிலேயே இதற்கு முன் ஒருமுறைதான் 50 கிலோ மீட்டர் வேகநடைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது 2ஆவது முறையாக கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.  

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக குறித்த போட்டியில் பங்கேற்ற 59 வீரர்களில் 12 பேர் பாதியில் விலகினர்

டோக்கியோவை சாதனைகளால் அலங்கரித்த மும்மூர்த்திகள்

உலக சம்பியனுக்கு அதிர்ச்சித் தோல்வி

பெண்களுக்கான கரப்பந்தாட்ட அரையிறுதியில்  நடப்பு உலக சம்பியனான சேர்பியாவை 3க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சேர்பியா அணி, வெண்கலப் பதக்கத்துக்கு போட்டியிடவுள்ளதுடன், அமெரிக்கா பெண்கள் கரப்பந்து அணி முதல்முறையாக ஒலிம்பிக் கரப்பந்து தங்கப் பதக்கத்துக்கான போட்டிக்கு தெரிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

மற்றைய அரையிறுதியில் பிரேசில் மகளிர் அணி 3-0 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரிய அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 

பெண்கள் வேகநடையில் இத்தாலிக்கு தங்கம்

பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் வேகநடைப் போட்டியில் இத்தாலி வீராங்கனை அன்டொனல்லா பும்சானா தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலமும் 29.12 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

தனது 30ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பும்சானா, 2016 ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைய பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் கொலம்பியா வீராங்கனை சந்த்ரா லொரேனா அரீனாஸ் வெள்ளிப் பதக்கத்தையும், சீனாவின் லுய் ஹோங் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

நான்கு‌ ‌ஒலிம்பிக்கில்‌ ‌நான்கு‌ ‌தங்கங்கள்:‌ ‌38‌ ‌வயது‌ ‌கியூபா‌ ‌வீரர்‌ ‌ சாதனை‌

ஆசிய சாதனையை முறியடித்த இந்தியா

ஆண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்டம் தகுதிச்சுற்றில் பங்குகொண்ட இந்திய அணி, போட்டித் தூரத்தை 3 நிமிடங்கள் 00.25 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன், குறித்த போட்டிப் பிரிவில் புதிய ஆசிய சாதனையையும் இந்திய அணி படைத்தது

எனினும் தகுதிச்சுற்றின் முடிவில் இந்திய அணிக்கு 9ஆவது இடம் கிடைத்ததுஇறுதிப் போட்டிக்கு முதல் 8 இடங்களைப் பிடித்த நாடுகள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவதால் இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்திய பெண்கள் ஹொக்கி அணிக்கு ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான ஹொக்கி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய பெண்கள் ஹொக்கி அணி 3-4 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து பெண்கள் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹொக்கி அணி முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

இதனால், ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்திய பெண்கள் ஹொக்கி அணி பதக்கம் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இதனிடையே, பெண்களுக்கான ஹொக்கி இறுதிப் போட்டியில் நெதர்லாந்து, ஆர்ஜென்டீனா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 3–1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆர்ஜென்டினாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது

41 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்திய ஹொக்கி அணி

கடற்கரை கரப்பந்தில் அமெரிக்கா தங்கம்

பெண்களுக்கான கடற்கரை கரப்பந்து இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அலிக்ஸ், ஏப்ரல் ஜோடி அவுஸ்திரேலியாவின் கிளான்சி, சோலார் ஜோடியை எதிர்கொண்டது. இதில் அமெரிக்க ஜோடி 21–15, 21–16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு வெள்ளியும், சுவிட்சர்லாந்துக்கு வெண்கலமும் கிடைத்தது

கராத்தேயில் சாண்ட்ரா முதல் பதக்கம்

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன் முறையாக கராத்தே போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் தங்கப் பதக்கத்தை ஸ்பெயின் தட்டிச் சென்றது. பெண்களுக்கானகாடாஇறுதிப் போட்டியில் ஸ்பெயினின் சாண்ட்ரா ஜெய்ம் (28.06 புள்ளிகள்), ஜப்பானின் கியோவுவை (27.88 புள்ளிகள்) வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

அலீசன் பீலிக்ஸுக்கு 10ஆவது பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், அமெரிக்காவின் அலீசன் பீலிக்ஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இப்போட்டியில் 49.46 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்தே பீலிக்ஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

35 வயதான பீலிக்ஸ், ஒலிம்பிக் அரங்கில் வென்ற 10ஆவது பதக்கம் இதுவென்பதுடன், மெய்வல்லுனர் போட்களில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா வீராங்கனை கார்ல் லிவிஸின் சாதனையையும் அவர் சமப்படுத்தினார்.    

இந்தப் போட்டியை 48.36 செக்கன்களில் நிறைவுசெய்த பஹாமாஸின் ஷோனி மில்லர்உய்போ தங்கப் பதக்கத்தை வென்றதுடன், 49.20 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த டொமினிக் குடியரசின் மரிலெய்டி போலின்ஹோ வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

ஏழு ஆண்டுகள் காத்திருந்து உசைன் போல்ட்டின் இடத்தைக் கைப்பற்றிய கனடா வீரர்

பிரித்தானியாவுக்கு ஹெட்ரிக் பதக்கம்

மெய்வல்லுனர் போட்டிகளின் 3ஆவது நாளான இன்றைய தினம் பிரித்தானியா 3 பதக்கங்களை வென்றது.

பெண்களுக்கான 1500 மீட்டரில் லோரா முய்ர் புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 3 நிமிடங்கள் 54.50 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இதனிடையே, ஆண்களுக்ககான 4x100 அஞ்சலோட்டத்தில் பிரித்தானியாவின் ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும். பெண்கள் அணி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தது.

மெக்ஸிகோவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான கால்பந்து போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜப்பான் அணியை 3க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி மெக்ஸிகோ அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

இதனிடையே, பெண்களுக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் சுவீடனை 3க்கு 2 என்ற பெனால்டி ஷுட் அவுட் முறையில் வீழ்த்தி கனடா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது

சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 14ஆவது நாள் நிறைவடையும் போது பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதன்படி, சீனா 36 தங்கம், 26 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 31 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கம் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 24 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளது

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<