கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் போட்டியின் போது, இலங்கை A கிரிக்கெட் அணி வீரர் விஷேன் ஹலம்பகே மற்றும் இந்திய A அணி துடுப்பாட்டவீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
>>ஓவல் டெஸ்டில் ஓய்வு பெறும் ஒல்லி ரொபின்சன்<<
தம்புள்ளையில் இந்திய A அணிக்கு எதிரான பரபரப்பான சுப்பர் ஓவர் போட்டியில் இலங்கை A அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹலம்பகே மற்றும் 15 வயதான இந்திய துடுப்பாட்ட வீரர் சூர்யவன்ஷி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி வைரலானதுடன், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்த போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் ஒழுக்காற்று நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஹலம்பகே மற்றும் சூர்யவன்ஷி ஆகிய இருவருக்கும் அவர்களின் போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதிக்க பரிந்துரைத்துள்ளதாக Newswire ஊடகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் கிடைக்கப்பெறும் மேலதிக தகவல்களின் அடிப்படையில் போட்டி நடுவரின் பரிசீலனை அறிக்கை இலங்கை மற்றும் இந்தியாவின் கிரிக்கெட் சபைகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேநேரம் இந்த முத்தரப்புத் தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) கீழ் நடத்தப்படாததால், அபராதம் விதிப்பது குறித்த இறுதி முடிவு அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியப் பிரதிநிதிகள் மற்றும் போட்டி அதிகாரிகளின் அது உள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த அபராதப் பரிந்துரை குறித்து போட்டி அமைப்பாளர்கள், இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது போட்டி நடுவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















