சீனாவின் ஷோஷிங் நகரில் நடைபெற்ற 2ஆவது ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில், ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பங்கேற்ற இலங்கை அணி புதிய தேசிய சாதனை படைத்து அசத்தியுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஷெஹான் அம்பேபிட்டிய, வினோத் சில்வா, ஹிமாஷ எஷான் மற்றும் மொஹமட் அஷ்ரப் ஆகியோர் அடங்கிய அணி 39.08 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்ததே இலங்கையின் தேசிய சாதனையாகப் பதிவாகியிருந்தது.
அதுமாத்திரமின்றி, இலங்கை தடகள வரலாற்றில் 4×100 மீட்டர் தூரத்தை 39 செக்கன்களுக்கும் குறைவான காலப்பகுதியில் கடந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை சார்பாக களம் இறங்கிய சமோத் யோதசிங்க, மெரோன் விஜேசிங்க, சலித் பியுமால் மற்றும் தினெத் இந்துவர ஆகிய வீரர்கள் அடங்கிய அணி, போட்டித் தூரத்தை 38.63 செக்கன்களில் கடந்து இந்த வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியது.
எனினும், பலத்த போட்டிக்கு மத்தியில் இலங்கை அணிக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்பிரிவில் சீனா தங்கப் பதக்கத்தையும், தாய்லாந்து மற்றும் சீன தாய்ப்பே ஆகிய நாடுகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றெடுத்தன.
ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் வெண்கலம்
ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி, பலத்த போட்டிக்குப் பின்னர் வெண்கலப் பதக்கத்தை வென்றது. போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள் 03.33 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது. அத்துடன், வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் காலிங்க குமாரகே, சதெவ் ராஜகருணா, கல்ஹார குருவிடக மற்றும் ஒமெல் சில்வா ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு ஏமாற்றம்

இதன்படி, குறித்த போட்டியில் வியட்நாம், சீனா மற்றும் கஸகஸ்தான் ஆகிய நாடுகள் முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது. இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்த இந்தியாவிற்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் 4ஆவது இடம்
4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் களமிறங்கிய காலிங்க குமாரகே, ஜித்மா விஜேதுங்க, சதெவ் ராஜகருணா மற்றும் லக்ஷிமா மெண்டிஸ் ஆகியோரைக் கொண்ட இலங்கை அணி, 3 நிமிடங்கள் 18.02 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றது. இது இவ்வருடத்தில் இந்த அணியின் சிறந்த காலப் பதிவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் கஸகஸ்தான் தங்கப் பதக்கத்தையும், இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.
4×100 மீட்டர் கலப்புப் அஞ்சலோட்டத்தில் அசத்தல்
இலங்கைக்கு முற்றிலும் புதியதொரு போட்டியான 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை அணி 4ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. சமோத் யோதசிங்க, அமாஷா டி சில்வா, தினெத் வீரரத்ன மற்றும் ரிசன்சா ஹிருபமா ஆகியோர் அடங்கிய இந்த அணி 45.75 செக்கன்களில் இலக்கை அடைந்தது. இப்போட்டியில் தாய்லாந்து தங்கப் பதக்கத்தையும், சீனா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதோடு, இந்தியா வெண்கலப் பதக்கத்தைச் தனதாக்கிக் கொண்டது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<























