இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக பிரபலமான முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசிம் அக்ரமிற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய தினம் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டிற்கான டயலொக் கிரிக்கெட் விருது விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இவர், இலங்கை தேசிய குழாமிலுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்காக SSC மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமொன்றில் கலந்துகொண்டார்.

“இன்று காலை இடம்பெற்ற பயிற்சிகளில் முன்னணி வீரர்களான லசித் மலிங்க மற்றும் நுவன் குலசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர். அனைவரும் பயிற்சிகளில் ஈடுபடவும் கற்றுக்கொள்ளவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதனை இது உணர்த்துகிறது. என்னுடன் சேர்ந்து அக்காலத்தில் விளையாடிய, தற்போது பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றி வரும் சம்பக ராமநாயக்க, சமிந்த வாஸ் மற்றும் ரவீந்திர புஷ்பகுமார ஆகியோரும் வருகை தந்திருந்தனர். வீரர்களுக்கு நான் வழங்கும் ஆலோசனைகள் பற்றி பயிற்றுவிப்பாளர்கள் அறிந்திருத்தல் முக்கியமானது என்பதே எனது கருத்தாகும். இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறிந்து கொள்வதே இப்பயிற்சி முகாமின் குறிக்கோளாக இருந்தது.” என அக்ரம் கருத்து தெரிவித்தார்.

பல முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களை உருவாக்கித் தந்த நாடு என்ற வகையில், இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர்களின் உதவியுடனே பல போட்டிகளில் வெற்றிகளை சுவீகரித்துள்ளது. எனினும் அண்மைய காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், இலங்கையில் ஆற்றல் மிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் காணப்படுவதாக வசிம் அக்ரம் தெரிவித்தார்.

“வேகப்பந்துவீச்சாளர்களைப் பொறுத்த மட்டில் இலங்கை அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக நான் நினைக்கின்றேன். நான் ஒரு பந்துவீச்சாளரில் முதலில் கவனிப்பது அவரின் வேகம் மற்றும் பந்தை காற்றில் ஸ்விங் செய்யும் திறமை என்பவை ஆகும். இம்மட்டத்திலுள்ள வீரர்களின் பந்துவீச்சுப் பாணியை மாற்றுவது தொடர்பில் நான் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில் ஒருவரின் பந்துவீச்சுப் பாணியை மாற்ற வேண்டுமென்றால், அதனை 17  வயது போன்ற இளம் வயதிலேயே செய்திருக்க வேண்டும். இன்று நான் ஆலோசனை வழங்கிய 19 வயதிற்குட்பட்ட வீரர்களில் பலர் திறமை வாய்ந்தவர்களாகும் ஆர்வமுள்ளவர்களாவும் இருந்தனர். அவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்க வேண்டியது முக்கியம். இலங்கை நாடு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை எனக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்துள்ளன. என்னை பொறுத்தவரையில் இலங்கையே உலகில் மிகச்சிறந்த நாடு.” என்றார்.

திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் ஆசிய அணிகளுக்கிடையில் பாகிஸ்தானே எப்போதும் முன்னிலையில் இருந்து வந்துள்ளது. வசிம் அக்ரம், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் மற்றும் ஷொஹைப் அக்தார் ஆகியோர் குறிப்பிட்டுக் கூடிய வீரர்களில் சிலராவர்.

தற்போதைய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்பாக அக்ரம் கருத்து தெரிவிக்கையில், “வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர் மற்றும் எமது ஏனைய வீரர்களின் குறைபாடு என்னவென்றால், அவர்கள் பந்தை ஸ்விங் செய்வதில் சற்று பின்னிலையிலுள்ளனர். வேகமாக பந்துவீசுதல் முக்கியமானது. எனினும் ஒரு துடுப்பாட்ட வீரரிடம் கேட்போமேயானால், வேகமாக பந்துவீசும் ஒருவரை விட மந்தமான கதியில் வீசினாலும் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளரை எதிர்கொள்வதே கடினமானது எனக் கூறுவர். பந்தை ஸ்விங் செய்வதில் திறன் பெற்ற ஒருவரினால் இலகுவாக விக்கெட்டுகளை பெறக் கூடியதாக இருக்கும். எனினும் பாகிஸ்தான் அணி தற்போது இவ்விடயத்தில் பின்னிலையிலுள்ளது.” எனத் தெரிவித்தார்.

ஸ்விங் பந்து வீச்சு ஜாம்பவான் வசிம் அக்ரம் தலைமையில் டிசம்பர் 1ஆம் திகதி பயிற்சிப்பட்டறை

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட்…

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் எனப் பெயர் பதித்த வசிம் அக்ரம், டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் வேண்டுகோள்களைப் பொறுத்து, தேவைக்கேற்ப ஆலோசகராக கடமையாற்ற தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அக்ரம் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் வசிம் அக்ரமின் வழிகாட்டலின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக விளையாடியிருந்தார். இது தொடர்பாக மெதிவ்ஸ் கருத்து தெரிவிக்கையில், “வசிம் அக்ரமிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது தொடர்பில் நான் மிக்க பெருமையடைகிறேன். பலர் அவரைப் ‘பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன்’ என அழைக்கின்ற போதிலும், என்னை பொறுத்தமட்டில் அவரை ‘வேகப்பந்துவீச்சில் மன்னன்’ எனலாம்.” என்றார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அரவிந்த டி சில்வா கருத்து வெளியிடுகையில், வசிம் அக்ரமே தான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் கடினமான பந்துவீச்சாளர் என்றதுடன், இவ்வாறான வீரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஆலோசனைகள் இலங்கை கிரிக்கெட்டிற்கு பயனுள்ளதாக அமையும் எனவும் கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய காலத்தில் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உடற்கூறு வல்லுநர்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு குறிப்பிட்டளவு ஓவர்கள் மற்றும் போட்டிகளே விளையாட இயலும் என்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே எமது வீரர்கள் உபாதைகளுக்கு உள்ளாகாமல் இருப்பது குறித்தும் நாம் கவனத்திற் கொள்ளல் வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், “முன்னர் டெனிஸ் லில்லீ, இம்ரான் கான், வசிம் அக்ரம் போன்ற வீரர்கள் உபாதைகளுடனே வெற்றிகரமாக விளையாட்டில் ஈடுபட்டனர். முக்கியமாக வசிம் அக்ரம் தனது அரைப்பகுதியில் ஏற்பட்ட உபாதையுடனே விளையாடினார் என்பதை நான் அறிவேன். நானும் அரைப்பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதையுடனே பல வருடங்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதுடன், நான்கு வருடங்களின் முன்னரே அதற்கான சத்திரச்சிகிச்சையை செய்து கொண்டேன். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியொன்றில் விரலில் எலும்பு முறிவொன்று ஏற்பட்டிருந்த போதிலும் அர்ஜுன ரணதுங்க அபாரமாக துடுப்பெடுத்தாடி எமது வெற்றிக்கு வழிவகுத்திருந்தார். எமது இளம் வீரர்களையும் இது போன்ற திடமான மனநிலையுடனான வீரர்களாக உருமாற்றுவதே நமது நோக்கு.” என கருத்து வெளியிட்டார்.

ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய இலங்கை அணி, அடுத்து வலுமிக்க தென்னாபிரிக்காவுடன் மோதவுள்ளது. தென்னாபிரிக்க மண்ணில் இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இத்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகள் உள்ளடங்குகின்றன. அண்மைக்காலமாக தென்னாபிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகின்ற நிலையில், தென்னாபிரிக்காவில் இலங்கை எதிர்கொள்ள வேண்டி வரும் சவால்கள் பற்றி அக்ரம் பின்வரும் கருத்தை வெளியிட்டார்.

“நான் இவ்வீரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகையில், வேகப்பந்துவீச்சு எவ்வளவு கடுமையானது என்பது பற்றியே முதலில் கூறினேன். வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசமின்றி உபாதைகள் ஏற்படுவது சாதாரணமான விடயம். முக்கியமாக தென்னாபிரிக்க ஆடுகளங்களின் கடினத்தன்மை காரணமாக முதுகு மற்றும் பின்தொடை பகுதிகளில் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நான் அங்கு விளையாடும் சந்தர்ப்பங்களில் கடும் உடல் வலி, தலை வலி மற்றும் காய்ச்சலுடன் பல தடவைகள் விளையாடியுள்ளேன். எனினும் சில மணித்தியாலங்களின் பின்னர் உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். தற்காலத்தில் சிறு சிறு உபாதைகளை காரணம் காட்டி வீரர்கள் பின்வாங்குவதை நான் அவதானித்துள்ளேன். அவர்கள் மனதளவில் திடமுள்ளவர்களாக இருந்தாலே போட்டிகளின் போது சாதிக்கலாம்.”