சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர் அணியானது 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
>>நியூசிலாந்து A அணியுடான முதல்தர தொடரினை கைப்பற்றிய இலங்கை
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பித்து தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கேற்கின்றது. தொடரின் முதல் போட்டி இன்று (28) சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர். இலங்கை மகளிர் அணியினர் அதன்படி முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் பெற்றனர்.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம தன்னுடைய 9ஆவது T20I அரைச்சதத்துடன் வெறும் 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் பெற்றார். அதேவேளை இமேஷா துலானி 7 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் மகளிர் பந்துவீச்சில் சுல்டானா கட்டூன் 29 ஓட்டங்களில் 2 விக்கெட்டுக்களை தனக்குச் சொந்தமாக்கியிருந்தார்.
>>இலகு வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை மகளிர்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணிக்கு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தததுடன் போட்டியில் தோல்வியினையும் தழுவியது.
பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் சொர்ணா அக்தார் 60 ஓட்டங்கள் பெற்று போராடிய போதும் அது பிரயோசனமாகியிருக்கவில்லை. இலங்கை மகளிர் பந்துவீச்சில் மால்கி மாதரா, சாமரி அத்தபத்து மற்றும் மிதாலி அயோத்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கை மகளிர் அணியின் ஹர்சிதா சமரவிக்ரம தெரிவாகியிருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















