பாக். வீரர் மொஹமட் நவாஸ் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு

13

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொஹமட் நவாஸ், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனையில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவர் மீது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இது குறித்து விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரம் குறித்து ஐசிசி-க்கு விரைவில் தெளிவுபடுத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சர்ச்சை காரணமாக மொஹமட் நவாஸின் தொழில்முறைத் திட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ‘சர்ரே’ அணிக்ககாக T20 பிளாஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருந்தன. மே மாத இறுதியில் அவர் அந்த அணியுடன் இணையவிருந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான தடையின்மை சான்றிதழை அவர் ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடமிருந்து பெற்றிருந்த போதிலும், இந்த விவகாரம் வெளிவந்ததை அடுத்து அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நவாஸின் இந்த போதைப்பொருள் பரிசோதனை முடிவானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடரின் போது பெறப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. அந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியிருந்த நவாஸ், 15 ஓட்டங்களையும் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடி வருகின்ற போதிலும், விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின் கீழ் அவருக்கு கடும் அபராதம் அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எது எவ்வாறாயினும், முகமது நவாஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும், ஏப்ரல் 30ஆம் திகதி மீண்டும் ஒரு பரிசோதனைக்கு அவர் உட்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொஹமட் நவாஸ் மீதான இந்த விசாரணை குறித்து மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆகிப் ஜாவேட் மற்றும் முஷ்டாக் அஹமட் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் வெளிநாட்டுப் சுற்றுப்பயணத்தின் போது கஞ்சா பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<