ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க

Indian Premier League 2024

59

இலங்கை T20i அணியின் தலைவரும், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான வனிந்து ஹஸரங்கவிற்கு நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது.

அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹஸரங்க காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த பங்காளதேஷ் அணிக்;கு எதிரான ஒருநாள் தொடரின்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்த வனிந்து ஹஸரங்க, இலங்கை கிரிக்கெட் சபை மருத்துவக் குழுவின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிந்து மேலும் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக டுபாய் சென்றிருந்தார். இதன்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அவர் பூரண குணமடைய புனர்வாழ்வு மற்றும் ஓய்வில் காலத்தை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இம்முறை ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதற்கு வனிந்து ஹஸரங்க தீர்மானித்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையும் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இம்முறை ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வனிந்து ஹஸரங்கவை ஒப்பந்தம் செய்தது. இது இலங்கை பணப்பெறுமதியில் கிட்டத்தட்ட 5.4 கோடி ரூபாவாகும்.

எது எவ்வாறாயினும், காயம் காரணமாக தற்போது வனிந்து ஹஸரங்க ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வனிந்துவிற்குப் பதிலாக மாற்று வீரரை விரைவல் அணியில் இணைத்துக் கொள்ளும் என பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இம்முறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுசங்கவும் பங்களாதேஷ் தொடரின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<