இலங்கை கிரிக்கெட்டின் ஊடக உரிமத்தை பெற்ற இந்திய நிறுவனம்

236

இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான சர்வதேச ஊடக உரிமையினை (Global Rights) அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்தியாவினைச் சேர்ந்த Sony Sports நிறுவனம் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

>>துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடக்கம் 2027ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை, இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்குரிய ஊடக உரிம மனுக்களை (Licencse Bids) கடந்த வாரம் மூலம் சர்வதேச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து  கோரியிருந்தது.

புதிய ஊடக உரிமத்திற்காக இந்தியாவினைச் சேர்ந்த Sony Sports நிறுவனமும் Disney Star நிறுவனமும் அதிக போட்டியிட்டதாக கூறப்பட்டதோடு, குறித்த ஊடக உரிமையினை இறுதியில் Sony Sports நிறுவனம் தமக்காகப் பெற்றதாக கூறப்படுகின்றது.

அதன்படி ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக உரிமையினை தமக்காக வைத்திருந்த Sony Sports நிறுவனம் தற்போது உரிமத்தை புதுப்பித்திருக்கும் நிலையில், புதிய உரிமத்திற்காக 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிட்டிருக்கலாம் என கிரிக்பஸ் (Cricbuzz) இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

>>ஊடக உரிமத்திற்கான மனுக்களை கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

இதேநேரம் ஊடக உரிமம் பெறப்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கை பங்கெடுககும் சுமார் 56 கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான வாய்ப்பு Sony Sports நிறுவனத்திற்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதியில் பண அடிப்படையில் அதிக முக்கியத்துவம் கொண்ட இலங்கை – இந்திய அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<