SSC, சிலாபம் மேரியன்ஸ் அணிகள் முதல் நாளில் ஆதிக்கம்

216
Malinda Pushpakumara

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு சுப்பர் 8 சுற்று போட்டிகள் புதன்கிழமை (31) ஆரம்பமாகின.

SSC எதிர் NCC

ஆரம்ப வரிசை வீரர்களின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் NCC அணிக்கு எதிராக SSC முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொழும்பு CCC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் SSC அணி தனது பலம் மிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வா இன்றியே களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அந்த அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மினோத் பானுக்க 28 ஓட்டங்களையே பெற்றார்.

எனினும் மறுமுனையில் துடுப்பாடிய சரித் அசலங்க, மிலிந்த சிறிவர்தனவுடன் இணைந்து 2 ஆவது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். இந்த இரு வீரர்களும் அரைச்சதம் பெற்றதோடு அடுத்து வந்த தசுன் ஷானக்கவும் சற்று வேகமாக ஆடி 63 ஓட்டங்களை குவித்தார்.

பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர்

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும் பார்க்க பந்துவீச்சு ஆலோசகராக

இதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது முதல் இன்னிங்சை ஆடிவரும் SSC அணி 8 விக்கெட்டுகளை இழந்து 335 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஷம்மு அஷான் 40 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

NCC அணி 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் அதன் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் லசித் அம்புல்தெனிய 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

போட்டியின் சுருக்கம்    

SSC (முதல் இன்னிங்ஸ்) – 335/8 (90) – மிலிந்த சிறிவர்தன 70, தசுன் ஷானக்க 63, சரித் அசலங்க 56, ஷம்மு அஷான் 40*, சாமர கபுகெதர 33, மினோத் பானுக்க 28, சலித் அம்புல்தெனிய 5/81  


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இம்முறை பிரீமியர் லீக் தொடரில் பந்துவீச்சில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சிலாபம் மேரியன்ஸ் அணித்தலைவர் மலிந்த புஷ்பகுமார கோல்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் கணிசமான நேரம் வீணானது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கோல்ட்ஸ் அணி நின்றுபிடித்து ஆடத் தவறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பசிந்து லக்ஷங்க அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றார்.

மறுபுறம் மலிந்த புஷ்பகுமார கோல்ட்ஸ் அணியின் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதான கோல்ட்ஸ் அணியின் ஆரம்ப மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 54 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட முதல்நாள் ஆட்டத்தில் கோல்ட்ஸ் அணி 156 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 156/8 (54) – பசிந்து லக்ஷங்க 37, சதீர சமரவிக்ரம 28, பிரியமால் பெரேரா 22*, மலிந்த புஷ்பகுமார 4/38, இசுரு உதான 3/31


BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

BRC அணியை முதல் இன்னிங்சில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் அணித் தலைவர் ஹர்ஷ குரே எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார். எனினும் BRC அணி 27 ஓட்டங்களை பெறுவதற்குள்ளேயே முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அடுத்து வந்த வீரர்களும் விக்கெட்டுகளை காத்துக்கொள்ளத் தவறினர்.

பங்களாதேஷுக்காக மொமினுல், ரஹீம் முதல் நாளில் சாதனை இணைப்பாட்டம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ்

கடைசி வரிசையில் வந்த விகும் சஞ்சய பெற்ற 34 ஓட்டங்களே அதிகபட்சமாகும். இதனால் BRC அணி 168 ஓட்டங்களுக்கே சுருண்டது. 19 வயது வேகப்பந்து வீச்சாளர் ரனித்த லியனாரச்சி 3 விக்கெட்டுகளை பதம்பாத்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின்போது 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 168 (57.3) – விகும் சஞ்சய 34, ஹஷேன் ராமனாயக்க 30, ருமேஷ் புத்திக்க 21, ரனித்த லியனாரச்சி 3/35, மொஹமட் டில்ஷாட் 2/38  

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 50/4 (15) – தனுக்க தபரே 30, விகும் சஞ்சய 2/10, திலகரத்ன சம்பத் 2/12


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்சில் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துறைமுக அதிகாரசபை அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் ஆரம்பம் முதலே மிக மந்தமாக துடுப்பெடுத்தாடியது. இதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவின்போது ராகம கிரிக்கெட் கழகம் 233 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ராகம கிரிக்கெட் கழகத்தின் அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 108 பந்துகளுக்கு முகம்கொடுத்து 52 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 233/6 (83) – லஹிரு திரிமான்ன 52, சமிந்த பெர்னாண்டோ 42, உதார ஜயசுந்தர 39, லஹிரு மலிந்த 37, சதுர பீரிஸ் 20, சானக்க கோமசாரு 2/55, மதுக லியனபதிரனகே 2/57  

நான்கு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.