சனத் ஜயசூரியவுக்கு விதிக்கப்பட்ட ஐசிசியின் தடை நீங்கியது!

547

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு விதிமுறை இரண்டினை மீறியதாக இரண்டு ஆண்டுகள் தடைக்கு முகங்கொடுத்திருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் தடைக்காலம் நிறைவுக்கு வந்துள்ளது.

கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் ஈடுபடுவதற்கு சனத் ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டிருந்த தகுதியற்ற காலம் நிறைவுக்கு வந்துள்ளமையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

PSL தொடரில் விளையாட பங்களாதேஷ் வீரர்களுக்கு அனுமதி

ஐசிசியின் சட்டத்தின் படி பின்வரும் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சனத் ஜயசூரியவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஜயசூரியவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சனத் ஜயசூரிய குறித்த குற்றங்களை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே இந்த தடை வழங்கப்பட்டிருந்தது.  

  • விதிமுறைகள் சரம் 2.4.6 இன் படி, .சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழையாது போனமை. விசாரணைகளின் ஒரு அங்கமாக ஊழல் தடுப்பு பிரிவு கேட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியமை.
  • விதிமுறைகள் சரம் 2.4.7 இன்  படி, .சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளை தாமதிக்க காரணமாக அமைந்தமை. இதற்குள் ஊழல்களை இனங்காணும் விசாரணைகளுக்கு தேவையாக இருந்த ஆவணங்களை சேதப்படுத்தியது, அதனை மறைத்து வைத்தது, மாற்றியது, அழித்தது போன்றவையும் அடங்கும்.

தன்னுடைய தடைக்காலம் நிறைவுக்கு வந்தமை தொடர்பில் சனத் ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

“சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு, கிரிக்கெட்டுடன் தொடர்புப்படுவதற்கான எனது தடை நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மீண்டும் கிரிக்கெட்டுடன் இணைய முடியும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் போது, உச்சபட்ச திறமைகளை வெளிப்படுத்தி விடைப்பெற்றேன்.  நான் நாட்டுக்காக கிரிக்கெட் ஆடினேன் என்பதை கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் அறிவர்.  கடந்த கடினமான காலப்பகுதியில் எனக்கு பலமாக இருந்த இலங்கை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரராக மாத்திரமின்றி, இலங்கை அணியின் சிரேஷ்ட தேர்வாளராக 2016ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி வரை செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<