கென்யாவின் நைரோபியில் உள்ள நயாயோ தேசிய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 2026 ‘கிப் கெய்னோ கிளாசிக்’ (Kip Keino Classic) மெய்வல்லுநர் தொடரில், இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ருமேஷ் தரங்க பத்திரகே புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் ‘கோல்ட் லெவல்’ (Gold Level) அந்தஸ்து கொண்ட இந்தப் போட்டியில், அவர் 89.28 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், ‘கோல்ட் லெவல்’ அந்தஸ்து கொண்ட மெய்வல்லுநர் போட்டியொன்றில் முதல் இலங்கை வீரராக வரலாற்றில் இடம்பிடித்த அவர், முதல் தங்கத்தையும் வென்று கொடுத்து சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியின் தனது இரண்டாவது முயற்சியிலேயே 89.28 மீற்றர் தூரத்தை எட்டிய ருமேஷ், கடந்த 2023 ஆம் ஆண்டு பெல்ஜியம் வீரர் திமோதி ஹெர்மன் (87.35 மீ) நிலைநாட்டியிருந்த சாதனையை முறியடித்தார்.
அதேபோல, ஈட்டி எறிதல் ஒலிம்பிக் சம்பியன்களான தோமஸ் ரோலர் (ஜேர்மனி) மற்றும் முன்னாள் உலக சம்பியன் ஜூலியஸ் யேகோ (கென்யா) போன்ற உலகின் முன்னணி வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி ருமேஷ் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கை சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க
- டோக்கியோவில் வரலாறு படைத்த ருமேஷ் தரங்க
- இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ருமேஷ் தகுதி
நடப்பு பருவகாலத்தில் (2026) உலகளவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சிறந்த தூரத்தைப் (89.47 மீ) பதிவு செய்துள்ள ருமேஷ் தரங்க, தனது வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எனது முதலாவது ‘கோல்ட் லெவல்‘ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வழிகாட்டிகளான ஜூலியஸ் யேகோ மற்றும் தோமஸ் ரோலர் ஆகியோருடன் இணைந்து போட்டியிடுவதை கௌரவமாகக் கருதுகிறேன். இலங்கையிலுள்ள இளம் வீரர்களுக்கு, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவே நான் விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இப்போட்டியில் 83.33 மீட்டர் தூரத்தை எறிந்த ஜேர்மனியின் தோமஸ் ரோலர் இரண்டாம் இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் டவ் ஸ்மித் (81.19 மீ) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக மெய்வல்லுநர் அரங்கில் பதக்கம் வெல்லக் காத்திருக்கும் இலங்கைக்கு, 25 வயதான ருமேஷ் தரங்கவின் இந்த உலகத்தரம் வாய்ந்த வெற்றி பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதுடன், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<






















