இறுதிப் போட்டிக்கு யார் என்ற மோதலில் இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை

381

இலங்கையில் ரெட் புல் அசரணையிலான உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட தொடரின் லீக் போட்டிகளின் இறுதி நாள் போட்டிகள் இன்று (27) நடைபெற்றன. இன்றைய போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெற்றி பெற்றன.  

எனினும், தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு ப்லே ஒஃப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஜனித் லியனகேயின் ஹெட்ரிக் மூலம் ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்த இலங்கை

ரெட் புல் அனுசரணையில் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான டி20…

பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஷஃபாப் ஜமில் மற்றும் அன்ஜும் அஹ்மத் ஆகியோர் தமது அணிக்காக தலா 25 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஐக்கிய அரபு இராச்சிய அணி வீரர்களான ராம் நாராயணன் 4 விக்கெட்டுகளையும், ராகுல் பதியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 130 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு விளையாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி, பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர் மஹ்பூபுர் ரஹ்மான் இன் சிறந்த பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக மெஹ்தி ஆசாரியா 21 ஓட்டங்களையும் மற்றும் ஆதித்யா கோதாரி 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பாக பந்து வீசிய மஹ்பூபுர் ரஹ்மான் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொண்டார். இவ்வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணி இத்தொடரில் 4 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டதோடு, இத்தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியீட்டி இருந்ததால் 2 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது.

Photos : Sri Lanka v Bangladesh | RedBull Campus Cricket 2018

Photos of Sri Lanka v Bangladesh | RedBull Campus Cricket 2018

இலங்கை எதிர் பாகிஸ்தான்

இன்று நடைபெற்ற மற்றைய போட்டியில் இலங்கையை எதிர்ததாடிய பாகிஸ்தான் அணி 62  ஓட்டங்களால் வெற்றி பெற்றது. SSC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. அதனடிப்படையில் ஷஃஸார் ஹஸன் (76) மற்றும் அர்ஸலான் பர்ஸான்ட் (56) ஆகியோர் அரைச்சதம் பெற, பாகிஸ்தான் அணியினர் தமது இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் சுபேசல ஜயதிலக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.  

பின்னர், 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹஷான் துமிந்து 76 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் முஹம்மத் அஸாத் மூன்று விக்கெட்டுகளையும் ஹம்ஸா காதிர் மற்றும் மஹ்மூத் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

இவ்வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இத்தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி தோல்வியடைந்த போதும் இத்தொடரில் மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பெற்று ப்லே ஒஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி

ரெட் புல் அனுசரணையுடன் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் இன்றைய…

   

இந்தியா எதிர் ஜிம்பாப்வே

லீக் போட்டிகளின் இறுதிப் போட்டியாக இன்று NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்று இத்தொடரில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து 10 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகவே தெரிவாகியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 244 என்ற பாரியதொரு ஓட்ட எண்ணிக்கையை பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக சுப்ஹம் நாகவாடே ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களை பெற்றதோடு ரோஹன் டம்லே 50 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.  

245 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தமது இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து இத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த அணியாக வெளியேறியது. போட்டியின் ஆட்ட நாயகனாக சுப்ஹம் நாகவாடே தெரிவானார்.

இத்தொடரில் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் அடுத்த அணியை தெரிவு செய்வதற்கான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ப்லே ஒஃப் போட்டி நாளை (28) SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<