50ஆவது தேசிய விளையாட்டு விழா ஜுன் 6ஆம் திகதி முதல் ஆரம்பம்

50th National Sports Festival 

1
50th National Sports Festival 

இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் (பொன் விழா) தேசிய விளையாட்டு விழா, எதிர்வரும் டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதன் பிராந்திய மட்டப் போட்டிகள் ஜூன் 6ஆம் திகதி (இன்று) முதல் நுவரெலியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

இம்முறை 50ஆவது பொன் விழா ஆண்டு நிறைவடைவதையொட்டி, தேசிய விளையாட்டு விழாவை மிகவும் கோலாகலமாகவும், விசேட அம்சங்களுடனும் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச அனுசரணையுடன் பிராந்திய, மாவட்ட மற்றும் மாகாண மட்ட என மூன்று கட்டங்களாக வருடாந்தம் நடத்தப்படும் நாட்டின் பிரதான விளையாட்டு விழாவான இது, இலங்கையின் முதலாவது விளையாட்டுத்துறை அமைச்சரான கே.பி. ரத்நாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைய 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது தேசிய விளையாட்டு விழா 1972 ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. அந்த ஆரம்ப விளையாட்டு விழாவின் சிறந்த வீரராக குறுந்தூர ஓட்ட வீரர் அதுல தேவசிங்கவும், சிறந்த வீராங்கனையாக உயரம் பாய்தல் வீராங்கனை முத்துலக்ஷ்மி கொடிகாரவும் விருதுகளைப் பெற்றிருந்தனர்.

>>49ஆவது தேசிய விளையாட்டு விழா தென்னிலங்கையி<<

1972ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 1983 மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்கள் காரணமாகவும், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கொவிட் பெருந்தொற்று காரணமாகவும் இவ்விளையாட்டு விழா நடத்தப்படவில்லை. தேசிய விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, 1975ஆம் ஆண்டு காலி பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற 4ஆவது தேசிய விளையாட்டு விழாவைத் தவிர, இதுவரை நடைபெற்ற ஏனைய அனைத்து விளையாட்டு விழாக்களிலும் அதிகளவிலான தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை மேல் மாகாணமே தன்வசப்படுத்தியுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள 50ஆவது விளையாட்டு விழாவில் பதக்கங்களையும், சம்பியன்ஷிப் பட்டங்களையும் வெல்லும் வீர வீராங்கனைகளுக்கான பரிசுத்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மேலும் தெரிவித்தார்.

‘இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறும் வீரர்களுக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய முதலிடத்தைப் பெறும் வீரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 15,000 ரூபா பணப் பரிசு இம்முறை 30,000 ரூபாவாக இரு மடங்கு அதிகரிக்கப்படும்’ என்றார்.

பிரதேச செயலக, மாவட்ட மட்டப் போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் தேசிய மட்டப் போட்டிகள் நடத்தப்படும். தேசிய விளையாட்டு விழா 32 ஒலிம்பிக் விளையாட்டுகளை உள்ளடக்கியது என்றும், தேசிய விளையாட்டு விழாவில் வெற்றிபெறும் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதே பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரதேச மட்டத்திலிருந்து வீரர்கள் தேசிய மட்டத்திற்கு வரக்கூடிய வகையில் இந்த விளையாட்டு விழா திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மட்டத்தில் திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<