முதல் முறை பாகிஸ்தான் சுபர் லீக் சம்பியனான குயேட்டா கிளேடியேட்டர்ஸ்

196

இந்த ஆண்டு நான்காவது தடவையாக இடம்பெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரின் இறுதிப் போட்டியில், பெசாவர் சல்மி அணியை 2 விக்கெட்டுகளால் தோற்கடித்திருக்கும் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி முதல்தடவையாக சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.  

பாகிஸ்தானின் பல்வேறு பிராந்தியங்களை பிரநிதித்துவம் செய்யும் ஆறு அணிகள் பங்கெடுக்கும் பாகிஸ்தான் சுபர் லீக் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமானது.

இலங்கை அணியை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க டி20 குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் டி20 தொடரில் ……

இத்தொடரின் முதற் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த குயேட்டா கிளேடியேட்டர்ஸ், இஸ்லாமாபாத் யுனைடட், கராச்சி கிங்ஸ் மற்றும் பெசாவர் சல்மி ஆகிய அணிகள் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகின.

கராச்சி நகரில் இடம்பெற்ற தொடரின் பிளே ஒப் சுற்றில் முதலாவது தகுதிகாண் (Qualifier) போட்டியில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி பெசாவர் சல்மி அணியினை 10 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற, குறித்த தகுதிகாண் போட்டியில் தோல்வியினை தழுவிய பெசாவர் சல்மி அணி ஏனைய தகுதிகாண் போட்டியில் (Eliminator 2)  இஸ்லாமபாத் யுனைடட் அணியினை 48 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இதனை அடுத்து கராச்சி நகரில்  நேற்று (17) பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் இறுதிப் போட்டி ஆரம்பானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பெசாவர் சல்மி அணிக்காக வழங்கினார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பெசாவர் சல்மி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பெசாவர் சல்மி அணியின் துடுப்பாட்டத்தில் உமர் அமின் 33 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் குவித்து அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார்.

ஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா

கேப்டவுனில் நடைபெற்ற இலங்கை அணிக்கு ……

அதேநேரம், குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் ஹஸ்னைன் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ட்வேய்ன் பிராவோவும் 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதிலும், அஹ்மட் ஷேசாத் மற்றும் றில்லி ரூசோ ஆகியோர் அவ்வணிக்காக சிறப்பான முறையில் ஆடினர்.

இவர்களது துடுப்பாட்ட உதவியோடு குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களுடன் அடைந்தது.

குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய அஹ்மட் ஷேசாத் அரைச்சதம் ஒன்றுடன் 51 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நிற்க, றில்லி ருசோவ் 39 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அதேநேரம் பெசாவர் சல்மி அணியின் பந்துவீச்சு சார்பில் வஹாப் ரியாஸ் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தம் தர முனைந்திருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க

இப்போட்டியில் வெற்றி பெற்ற குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி ஏற்கனவே 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுபர் லீக் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு தெரிவான பின்னர், இந்த ஆண்டே சம்பியனாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் மொஹமட் ஹஸ்னைன் தெரிவாகினார். அதோடு, இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் சிறந்த வீரர் விருதையும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின்  ஷேன் வொட்சன் பெற்றுக் கொண்டார். அதேவேளை, பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது பெசாவர் சல்மி அணியின் ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

பெசாவர் சல்மி – 138/8 (20) உமர் அமின் 38(33), மொஹமட் ஹஸ்னைன் 30/3(4), ட்வேய்ன் பிராவோ 24/2(4)

குயேட்டா கிளேடியேட்டர்ஸ் – 139/2 (17.5) அஹ்மட் ஷேசாத் 58(51)*, றில்லி ரோசோவ் 39(32)*, வஹாப் ரியாஸ் 19/1(4)

முடிவு – குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<