டான் கிண்ண இறுதி மோதலில் YSSC – விக்னேஸ்வரா அணிகள் பலப்பரீட்சை

690

மட்டக்களப்பு கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தும் மாவட்டத்தின் பிரிவு ஏ (டிவிசன் ஏ) அணிகளுக்கு இடையிலான “டான் கிண்ண” கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக் கழகமும் (YSSC) மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

மட்டக்களப்பு கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்த இறுதிப் போட்டியில் இவ்விரு அணியினரும் எதிர்வரும் 27ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் அரங்கில் பலப்பரீட்சை நடாத்த உள்ளனர்.

எனது தந்தையின் கனவு நனவாகியிருக்கின்றது – மொஹமட் முஸ்தாக்

ஒரு விளையாட்டில் வீரர் ஒருவர் தனது தாய்நாட்டு அணியில் பிரதிநிதித்துவம் …

ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக் கழகம் (YSSC)

1972ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எம். அசாம் மற்றும் செயிட் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரின் முனைப்பால் உருவெடுத்த இக்கழகம் பல தசாப்தங்களை கடந்து தற்பொழுது எம்.எம். முகைதீன் (அதிபர்) அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பில் பலம்பொருந்திய கழகமாக தடம்பதித்து நிற்கின்றது.

இக்கழகம் கடந்த வருடம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஏ தர பிரிவில் விளையாடும் பிரிவு 2 (டிவிசன் இரண்டு) சுற்றுப்போட்டியில் அரையிறுதி வரை நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி அண்மையில் காத்தான்குடி கால்பந்து அபிவிருத்தி ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண அணிகளுக்கான கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் சம்பியனாகவும், குருனாகல் குளியாபிடிய பிரதேசத்தில் நடைபெற்ற அணிக்கு 9 பேர் கொண்ட தேசிய ரீதியான சுற்றுத்தொடரில் சம்பியனாகவும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் நடாத்திய 2017 மற்றும் 2018ஆம் ஆண்டிற்கான சுற்றுத்தொடரில் சம்பியனாகவும் முடிசூடியது.

அதேவேளை, மாவட்ட ரீதியில் முன்னணியில் இருக்கும் இக்கழகம் நடைபெற்று முடிந்த மாவட்ட செயலக அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடரிலும் வெற்றிபெற்று நடப்புச்சம்பியனாக திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்

கடந்த 1972 ஆம் ஆண்டு உதயமான இக்கழகம் கால்பந்து தொட்டு பல பெருவிளையாட்டுக்களிலும் தமது திறமையை நிரூபித்து வருகின்றது. இக்கழக வளர்ச்சிப்போக்கில் 1995 – 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி பொற்காலமென குறிப்பிடமுடியும்.

பி.எஸ்.ஜி. அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நெய்மரின் உபாதை

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் மென்செஸ்டர் யுனைடட் அணியுடனான …

இக்காலத்தில் அரசடித்தீவில் நடைபெற்ற அனைத்து பெருவிளையாட்டுக்களிலும் இவர்கள் வெற்றிவாகை சூடினர். இதன் பின்னராக 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தில் பிரிவு பி யில் அங்கத்துவம் பெற்றுக்கொண்ட இக்கழகம் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றிபெற்று பிரிவு ஏ க்கு தரமுயர்த்தப்பட்டது.

டான் டீவியின் 3ஆவது வருட சுற்றுப்போட்டியில் பங்கேற்று பலம்பொருந்திய அணிகளை வெற்றிகொண்டு அரையிறுதியில் மட்டு சீலாமுனை இளம்தாரகை அணியினரை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி இவ்வணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

அரையிறுதிப் போட்டிகள் பற்றி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் சீலாமுனை இளம்தாரகை அணியை எதிர்த்து அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் களமிறங்கியது.

போட்டியின் முதல் பாதி மிக மிக சுவாரஷ்யமாக அமைந்து காணப்பட்டது. இதன்போது விக்னேஸ்வரா அணியின் திறமைமிக்க முன்கள வீரரான வேந்தனின் விடாமுயற்சியால் 32வது நிமிடத்தில் ஒரு கோலினைப் புகுத்தி 1 – 0 என்ற கணக்கில் விக்னேஸ்வரா அணி முதல் பாதி முடிவில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்தும் 2வது பாதியில் தாங்களும் சளைத்தவர்களல்ல என்ற பாணியில் சீலாமுனை இளம்தாரகை அணியினர் முயற்சித்தும் பலனளிக்காமல் விக்னேஸ்வரா அணியின் ரதன் போட்டியின் 82 வது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

>>புகைப்படங்களைப் பார்வையிட  

இதனால், ஆட்டத்தின் முழுநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நிறைவுபெற்று விக்னேஸ்வரா அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு இக்னேசியஸ் மற்றும் ஏறாவூர் இளம் தாரகை அணியினர் களமிறங்கினர்.

போட்டியின் முதலாவது பாதி மிக விறுவிறுப்பாகவும் உத்வேகத்துடனும் நடைபெற்றது. எனினும், முதல் பாதி இரு அணிகளாலும் எவ்வித கோல்களும் பெறாத நிலையில் நிறைவுற்றது.

தொடர்ந்தும் 2வது பாதியில் பயிற்றுவிப்பாளரின் ஆலோசனைக்கிணக்க தனது ஆட்டப்பாணியை மாற்றிக்கொண்ட ஏறாவூர் இளம்தாரகை அணி 63வது நிமிடத்தில் முன்கள வீரர் அனஸ் மூலமும் 82 வது நிமிடத்தில் தேசிய அணி வீரரான முஸ்தாக் மூலமும் கோல்களைப் புகுத்தி இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இறுதிப் போட்டியில் களமிறங்கும் இளம்தாரகை அணியும் விக்னேஸ்வரா அணியும் இதுவரை எவ்வித போட்டிகளிலும் எதிர்கொண்டதில்லை. இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்தப்பக்கம் என்பது சொல்லமுடியாத ஒன்றாக உள்ளது.  

ரட்னமை வீழ்த்த இறுதி நிமிடத்தில் கோல் பெற்ற ரினௌன் வீரர் திலிப்

இலங்கையின் பழைமை வாய்ந்த இரு கால்பந்து கழகங்களான ரினௌன் மற்றும் ரட்னம் …

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை கால்பந்து சங்கத்தின் தலைவர் அனுர டி சில்வா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்

இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 இலட்சம் ரூபா பணத்தொகையும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணத்தொகையும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இப்போட்டிக்கு பூரண அணுசரனையாளரான டான் டீவி குழுமத்தின் தலைவர் எஸ்.எஸ். குகநாதன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<