தென்னாபிரிக்க தொடருக்கான டி20 குழாமிலும் டோனிக்கு இடமில்லை

92

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் குழாம் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழாம் இன்று (29) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகளிலும் பங்கேற்கின்றது. வெளியிடப்பட்டுள்ள டி20 சர்வதேச குழாமின் அடிப்படையில் இந்திய அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார். 

தென்னாபிரிக்க டி20 அணியின் தலைவராக குயின்டன் டி கொக் நியமனம்

நிறைவுக்குவந்த 12 ஆவது ஐ.சி.சி….

அண்மையில் நிறைவுக்குவந்த ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய காரணத்தினால் மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த 25 வயதுடைய நம்பிக்கை சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா மீண்டும் குழாமுக்கு திரும்பியுள்ளார். 

உலகக்கிண்ண தொடரின் பின்னர் ஓய்வா.? இல்லையா.? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில், இரண்டு மாதம் இந்திய இராணுவப்படையில் இணைந்து பணியாற்றுவதற்காக விசேட வேண்டுகோளின் பெயரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் சென்றிருந்த முன்னாள் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் டோனி தற்போது தென்னாபிரிக்க அணியுடனான டி20 சர்வதேச குழாமிலும் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். 

அண்மையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடியிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் போது இந்திய அணியில் விளையாடிய முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவ்னேஸ்வர் குமார் குறித்த தொடரில் பிரகாசிக்காததன் காரணமாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். 

மேலும் உலகக்கிண்ண தொடரின் போது உபாதை காரணமாக இடைநடுவில் வெளியேறிய தமிழக சகலதுறை வீரர் விஜய் சங்கர் மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் உபாதை காரணமாக இடம்பெறவிட்டாலும், அண்மையில் நிறைவுக்கு வந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். இருந்தாலும் தற்போது தென்னாபிரிக்க டி20 குழாமிலும் அவர் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். 

ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2020ஆம்…..

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டு, தனியாக டெஸ்ட் தொடருக்கான குழாமில் இடம்பெற்று அசத்திவரும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு தொடர்ந்தும் தென்னாபிரிக்க அணியுடனான டி20 சர்வதேச தொடரிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 சர்வதேச தொடரின் போது முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச உலகிற்கு அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி, கன்னி தொடரில் அசத்தியதன் காரணமாக தொடர்ந்தும் விளையாடும் அடிப்படையில் தென்னாபிரிக்க தொடருக்கான டி20 குழாமிலும் இடம்பெற்றுள்ளார். 

வெளியிடப்பட்டுள்ள குழாமில் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷைனியுடன் இணைந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹார் மற்றும் 21 வயதுடைய இளம் வீரர் கலீல் அஹமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுழல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர், பாண்டியா சகோதரர்களில் ஒருவரான குர்ணல் பாண்டியா, சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுழல்  பந்துவீச்சாளர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குவதன் காரணமாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தொடர்ந்தும் தேர்வுக்குழுவினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் தொடர்ச்சியாக சிரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் போன்ற இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவண்ணம் உள்ளன. மேலும் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண தொடருக்காக வீரர்களை தெரிவு செய்யும் அடிப்படையில் குறித்த குழாம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அரிய சாதனை படைத்த ஜலஜ் சக்சேனா

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் 6,000….

டி20 சர்வதேச தொடருக்கான இந்திய குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், சிரேயஷ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), ஹார்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், கலீல் அஹமட், தீபக் சஹார், நவ்தீப் ஷைனி

டி20 சர்வதேச தொடர் அட்டவணை (அனைத்து போட்டிகளும் இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.)

  • 15 செப்டம்பர் – முதலாவது போட்டி – தர்மசாலா
  • 18 செப்டம்பர் – இரண்டாவது போட்டி – மொஹாலி
  • 22 செப்டம்பர் – மூன்றாவது போட்டி – பெங்களூரு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<