இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் அருகில் இருப்பதாக தெரியவில்லை – கங்குலி

66

கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுக்கள் அனைத்துமே முடங்கியிருக்கின்றன. கிரிக்கெட் போட்டிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகில் இடம்பெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினை சீராகும் போது கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றிய அரங்குகளில் நடாத்துவது தொடர்பான விவாதங்களும்  இடம்பெற்றுவருகின்றன.  

விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ள உமர் அக்மல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அந்நாட்டு வீரர் உமர் அக்மல் ஆகியோருக்கு…

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவ ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நியூசிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் பங்குபற்றிய ஒருநாள் போட்டி ஒன்றும், இந்தியாவின் ராஞ்சி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியும் (ஐந்தாம் நாள் ஆட்டம்) இரசிகர்கள் இல்லாத மைதானங்களில் நடைபெற்றிருந்தன.  

இதேநேரம், ஜேர்மனியின் புன்டஸ்லிகா கால்பந்து தொடர், எதிர்வரும் மே மாத இறுதியில் இரசிர்கள் இல்லாத மைதானங்களில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் கொரோனா வைரஸ் இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் போட்டிகளை இரசிகர்கள் இல்லாத மைதானங்களில் நடாத்துவது தொடர்பான விவாதங்கள் வலுப்பெற பிரதான காரணங்களாக அமைகின்றன. 

இச்சந்தர்ப்பத்தில் மார்ச் மாதம் ஆரம்பமாகவிருந்து பின்னர் தடைப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் உள்ளடங்கலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் குறுகிய காலப்பகுதி ஒன்றுக்குள் மீண்டும் நடைபெறுவது சாத்தியம் இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரான சௌரவ் கங்குலி கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

”இந்தியாவிலும், ஜேர்மனியிலும் சமூக அமைப்புக்கள் வித்தியாசமானதாக இருக்கின்றது. இதனால், மிகவும் குறுகிய காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் சாத்தியம் கிடையாது.”

”இதேநேரம், (கிரிக்கெட் போட்டிகளை நடாத்த) பல மறுப்புக்களும் இருந்து வருகின்றன. அதோடு, நான் மனித உயிருக்கு ஆபத்து தரும் விளையாட்டு ஒன்றில் நம்பிக்கை உடையவன் இல்லை.” 

அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரும், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் வீரருமான ஹர்பஜன் சிங் இரசிகர்கள் அல்லாத மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளினை மீள ஆரம்பிப்பது சிறந்த விடயமாக இருக்காது எனக் கூறியிருக்கின்றார். 

”(ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெறும் போது) ஐ.பி.எல். அணிகள் பயணம் செய்ய வேண்டி ஏற்படும். இதன் போது விமான நிலையங்கள், ஹோட்டல்கள், மைதானத்திற்கு வெளியே என பல இடங்களில் மக்கள் கூட்டம் இருக்கும். அப்போது நீங்கள் சமூக இடைவெளி ஒன்றினை பேண வேண்டும் எனில், அது எப்படி சாத்தியம்? எனவே, கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறக் கூடாது.”   என்றார்.  

இதேவேளை, இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.  இந்த உலகக் கிண்ணத்தினை நடாத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தற்போது ஆரம்பித்திருக்கின்றது. இதன் முதற்கட்டமாக இந்த உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியாவில் தொலைக்காட்சி நேரடி அஞ்சல் உதவியுடன், இரசிகர்கள் இன்றி நடாத்துவதற்கான திட்டங்கள் கலந்தாலோசனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. 

2023 உலகக் கிண்ணத்தை குறிவைக்கும் ஆதில் ரஷீட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இடதுகை மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் ஆதில்…

மறுமுனையில், அவுஸ்திரேலிய நாட்டு அரசாங்கம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை தமது எல்லைகளை மூடியிருப்பதனால் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் T20 உலகக் கிண்ணத்தினை நடாத்துவது சிரமம் எனக் கூறும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சுனீல் கவாஸ்கர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்சினை சரியாகும் போது இந்தியாவிலேயே இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை நடாத்த ஆலோசனை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறவிருப்பதால் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தை இந்தியாவில் நடாத்தி, அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியாவில் மாற்றி நடாத்துவது கவாஸ்கர் வழங்கிய ஆலோசனையின் பிரதான குறிக்கோளாக இருக்கின்றது.  கவாஸ்கரின் ஆலோசனைக்கு முடிவு ஒன்றினை எடுக்க அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளினதும் ஒப்புதல்கள் தேவையாக இருக்கின்றது. 

எது எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் பிரச்சினை இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் இரசிர்கள் இல்லாத நிலையிலும் கூட கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவது பாரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<