கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் மனோஜ் திவாரி

96

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான மனோஜ் திவாரி ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

37 வயது நிரம்பிய மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்ற போதும் IPL தொடர் மற்றும் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ண முதல்தர கிரிக்கெட் தொடர் என்பவற்றில் விளையாடி அதிக அனுபவம் கொண்டவீரராக காணப்படுகின்றார்.

பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் ஆடுவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்

மனோஜ் திவாரி தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் விடயத்தினை தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாக்கிரம் கணக்கு வாயிலாக வியாழக்கிழமை (03) உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by MANOJ TIWARY (@mannirocks14)

இந்தப் பருவத்திற்கான ரஞ்சி கிண்ணத் தொடரில் பெங்கால் அணியை வழிநடாத்திய மனோஜ் திவாரி தனது அணியை தொடரின் இறுதிப் போட்டி வரை வழிநடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் IPL தொடர்களில் மனோஜ் திவாரி டெல்லி டெயார்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகளை பிரதிநிதித்துவம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் 9900 ஓட்டங்களை குவித்திருக்கும் மனோஜ் திவாரி 48.56 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 29 சதங்களை குவித்திருக்கின்றார். அதேநேரம் 2012ஆம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சென்னையை வீழ்த்தி IPL சம்பியன் பட்டம் வென்ற போது கொல்கத்தா அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் ஒருவராக மனோஜ் திவாரி காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மனோஜ் திவாரி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக தற்போது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<