இராணுவ அரை மரதனில் அசைக்க முடியாத வீரராக சண்முகேஸ்வரன்

109

இலங்கை இராணுவத்தினால் 56ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பிடித்தார்.

இதன்மூலம் இராணுவ அரை மரதன் ஓட்டப் போட்டியில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று அவர் சாதனை படைத்தார். இதற்கு முன் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அவர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையில் நடத்தப்படுகின்ற இந்த ஆண்டுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டி கடந்த திங்கட்கிழமை (03) நடைபெற்றது.

இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 119 வீரர்கள் மற்றும் 28 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்த இம்முறை போட்டியானது கொழும்பில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் இருந்து பனாகொட இராணுவ முகாம் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெற்றது.

இதன்படி, இராணுவ பீரங்கிப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஆவது தடவையாகவும் ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த போட்டியை ஒரு மணித்தியாலமும் 09.51 செக்கன்களில அவர் நிறைவு செய்தார். இதேவேளை, இம்முறை இராணுவ அரை மரதன் ஓட்டப் போட்டியில் சிங்க படையணியைச் சேர்ந்த எஸ்.எம் குணசேகர 2ஆவது இடத்தையும், காலாட் படையணியைச் சேர்ந்த கே.கே.எல் பிரமோத் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே, குறித்த போட்டிகளின் பிறகு இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் இராணுவத் தளபதி விக்கும் லியனகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், வெற்றயீட்டிய வீரர்களுக்கு பதக்கமும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<