அபுதாபி T10 லீக்கில் சங்கக்காரவுக்கு புதிய பதவி

423

கிரிக்கெட் உலகின் மற்றுமொரு புதிய வடிவிலான தொடராக அமையப் பெற்றுள்ள அபுதாபி T10 லீக் தொடரில் அபுதாபி அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அபுதாபி T10 லீக் தொடர் ஜனவரி மாதம் 28ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

>>அபுதாபி T10 தொடரில் விளையாடவுள்ள 12 இலங்கை வீரர்கள்!

எட்டு அணிகள் பங்குபற்றவுள்ள இந்த தொடரில் கிறிஸ் கெய்ல், சஹீட் அப்ரிடி, டுவைன் பிராவோ, அன்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.

அத்துடன் திசர பெரேரா, இசுரு உதான, பானுக ராஜபக்ஷ உள்ளிட்ட பன்னிரெண்டு இலங்கை வீரர்கள் இம்முறை அபுதாபி T10 லீக் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்றுள்ள அபுதாபி அணியின் ஆலோசகராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று (05) டுவிட்டர் மூலம் அந்த அணி அறிவித்திருந்தது.

>>Team Abu Dhabi Cricket@TeamADCricket

எதுஎவ்வாறாயினும், குறித்த நியமனம் தொடர்பில் குமார் சங்கக்கார இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மறுபுறத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றதன் பிறகு வர்ணனையாளராக மாத்திரம் செயற்பட்டு வந்த குமார் சங்கக்கார முதல்தடவையாக சர்வதேச லீக் தொடரொன்றில் ஆலொசகராக செயற்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கிரிக்கெட் உலகின் சிக்ஸர் மன்னரான கிறிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ள அபுதாபி அணியில் இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<