T20 உலகக் கிண்ணம் 2026; பங்களாதேஷின் வெளியேற்றத்தை ஆராய குழு

2

நடைபெற்று முடிந்த 2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணி விலகியதற்கான காரணத்தை ஆராய, அந்நாட்டின் விளையாட்டு அமைச்சு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

>>இலங்கை மகளிர் A அணியில் தமிழ்பேசும் வீராங்கனை சஜிந்தினி

2026ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்ததை அடுத்து, இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறிய பங்களாதேஷ் 2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்காது என தீர்மானம் மேற்கொண்டிருந்தது. மேலும், இந்தியாவில் ஒழுங்கு செய்யப்பட்ட பங்களாதேஷின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் ஐ.சி.சி இடம் கோரிக்கை விடுத்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கையை ஏற்காத ஐ.சி.சி. T20 உலக கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சேர்த்தது.

இந்த நிலையில் T20 உலக கிண்ணத் தொடரினை தவிர்த்தது ஒரு இராஜதந்திர தோல்வியா என்பதைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று பங்களாதேஷின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் அமினுல் ஹக் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனவே அதிகாரப்பூர்வ அரசாங்க உத்தரவின்படி, முன்னாள் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஹபிபுல் பஷர் உள்ளடங்கலாக மூன்று பேர் அடங்கிய குழுவினர் இந்த விடயம் தொடர்பில் ஆராயவிருக்கின்றனர்.

அதேநேரம் இந்தக் குழு தனது அறிக்கையை 15 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<