கனிஷ்ட மெய்வல்லுனரில் புசல்லாவை வீரர் குகேந்திரபிரசாத்துக்கு முதல் தங்கம்

172

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (04) நிறைவுபெற்ற 62ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கண்டி மாவட்டம், புசல்லாவை இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெயகாந்தன் குகேந்திரபிரசாத் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கனிஷ்ட மெய்வல்லுனரில் 2019இன் அதிசிறந்த வீரரானார் கமல்ராஜ்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால்….

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான தேசிய கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 02ஆம், 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் நடைபெற்றது

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட புசல்லாவை இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெயகாந்தன் குகேந்திரபிரசாத் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 36 நிமிடங்கள் 18.01 செக்கன்களை எடுத்துக் கொண்டார்

10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம்ந்த மலையகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரரான அஜந்தனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற குகேந்திரபிரசாத், அண்மைக்காலமாக மரதன் மற்றும் பாடசாலை மட்டப் போட்டிகளில் 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சுமார் 2 மாதகால குறுகிய பயிற்சிகளை மேற்கொண்டு இம்முறை தேசிய கனிஷ் மெய்வல்லுனரில் களமிறங்கிய குகேந்திரபிரசாத், தேசிய மட்டத்தில் பதக்கமொன்றைப் பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

Photos: Junior National Athletics Championship 2019 – Day 02

ThePapare.com | Sithija De Silva | 03/09/2019 Editing and re-using images without permission of ThePapare.com…..

இதேநேரம், போட்டிகளின் இரண்டாவது நாளில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த குகேந்திர பிரசாத்துக்கு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஐந்தாவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது

எனினும், குறித்த போட்டியை நிறைவுசெய்ய 16 நிமிடங்கள் 37.42 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்

இந்த நிலையில், போட்டியின் பிறகு எமது இணைத்தளத்திற்கு குகேந்திரபிரசாத் வழங்கிய செவ்வியில், இந்த வெற்றி எனக்கு பெரு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. நான் மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுள்ளேன். ஆனாலும், இதுதான் தேசிய மட்டத்தில் எனக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்

இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த எனது பயிற்சியாளர் அஜந்தன் மற்றும் பாடசாலைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அதேபோல, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள இளைஞர் சேவைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி சிறந்த காலத்தைப் பதிவுசெய்ய எதிர்பார்த்துள்ளேன். மேலும், எதிர்வரும் காலத்திலும் இதேபோல பல வெற்றிகளைப் பெற்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையைத் தேடிக் கொடுப்பேன்” எனத் தெரிவித்தார்

கனிஷ்ட மெய்வல்லுனரில் சாதனை படைத்த பவிதரன், புவிதரன் சகோதரர்கள்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்…..

இதேவேளை, இம்முறை தேசிய  கனிஷ் மெய்வல்லுனரில் புசல்லாவை இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மேலும் இரு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட எஸ். மஹேஸ்வரன் (2 நிமிடங்கள் 16.93 செக்.) 7ஆவது இடத்தையும், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் கே. கோவிசரன் 12.77 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 8ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதேநேரம், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1,500 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட புசல்லாவை சரஸ்வதி கல்லூரி மாணவன் டி. வினோதரன் (4 நிமிடங்கள் 21.04 செக்) நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.  

இந்த நான்கு வீரர்களும் மலையகத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய வீரர் அஜந்தனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<